பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 30 novembre 2014

தனிமை போக்கும் நினைவுகள்



 விண்ணில் மிதக்கும் விண்முகில்போல்

    விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல் 

கண்ணின் பார்வை தொலைநோக்கக் 

   காணும்   உலகம்  விரிந்தோடத்

தண்ணீர்  மீதின்  காட்சிகள்போல் 

   தளிர்ந்து  மனத்தில் சஞ்சரிக்க 

என்னுள்  வாழ்ந்து  எழுச்சியுறும்

     இறந்த  கால   நினைவுகளே !


பள்ளிப்  பருவ  நாளங்கே  !

   பாடித்  திரியும்  நண்பரங்கே !

சொல்ல இயலாச் சிரிப்பங்கே !

   துயரம்  தாளா  மனதங்கே !

செல்லம் கொடுக்கத்  தாயங்கே !

 சிந்தை ஊக்கும் தந்தையங்கே !

உள்ளம் என்னும் உலகினிலே 

   உலவித் திரியும் நினைவுகளே !


இன்ப துன்ப நினைவெல்லாம் 

    இறந்த  கால மனச்சின்னம் !

இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை  

     எளிதாய்  முடிக்க வழிக்காட்டி !

என்றும்  வாழ்வுப் பயணத்தில்  

     இணைந்துச்  செல்லும் வழித்தோழன் !

இன்றுச்  செய்யும் செயல்கள்தான்

     இனிமேல்  மாறும்  நினைவுகளாய் !


வாழ்க்கைப் பயணம் உள்ளவரை 

   வாழும் நினைவோ  பலகோடி !

சூழும் நினைவில் தத்தளித்துச் 

    சுழன்று தவிக்கும் நம்மனது !

வீழ்த்தும் துன்ப நினைவுகளும் 

   விரும்பும் இன்ப நினைவுகளும் 

ஆழ்த்தும் நம்மைக் கனவுலகில் !

     ஆழ்ந்துப்  பார்த்தால்  மாயுலகம்  !


- தணிகா சமரசம்  


காலமோ மாறி ஓடும்
  கற்பனை, சுவையும் மாறும் !
ஞாலமோ சுமையை வாழ்வில்
  நாளுமே ஏற்றி வைக்கும் !
பாலமாய் நின்று தாங்கும்
  பாசமும் மறைந்து போகும் !
தூலகம் (விடம்) நிறைந்த போதில்
  தூததும் நினைவே அன்றோ !


எண்ணும் பொழுதில் விளையாடும்
  இளையோர் நினைவும் அதிலன்றோ !
வண்ணம் மின்னும் காதலதும்
  வாழ்வில் மாந்தர் நினைவன்றோ !
திண்ணம் முதியோா் கனவெல்லாம்
  தேடும் வம்ச வளமன்றோ !
சுண்ணம் (தூசு) போன்று மறைந்தேகி
  தொடரும் கடிதோர் நாளன்றோ !


அலைபாயும் நினைவுகளோ ஆயிரங்காண் ! ஆங்கே
  அலைக்கழியும் மனமதிலே அடுக்கடுக்காய் முற்றும்
கலையாத கனவுகளும், காணுகின்ற உறவும்,
  கண்டுவிட்ட பிரிவினிலே கனக்கின்ற உணர்வும்
நிலையாக நின்றாடி நிம்மதியைத் தொலைக்கும் !
  நீக்கமற நிறைந்துவிடும் நினைவுக்கே என்றும்
விலையாகக் காலமதை வீணுக்கு இறைத்தே
  விரைகின்ற வாழ்வினிலே வரவொன்றும் இலையே !

திருமதி சிமோன் 


Aucun commentaire:

Enregistrer un commentaire