பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 30 septembre 2014

எண்ணப் பரிமாற்றம்

http://2.bp.blogspot.com/-ylTfAzPzPuE/UYSFAusKF9I/AAAAAAAADuk/_G-I-4dmrqA/s1600/213FFB2B-7FF3-41BB-98B1-42B0FCCEF4C1.JPG


அன்புடையீர்,

வணக்கம். மனிதன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற அறிவும், புரிதலும் இல்லாமல் வாழ முடியாது. ஏனெனில் அவை அவனது தனி வாழ்வைப் பாதிக்கக்கூடியவை. அப்படி நடக்கும் நிகழ்வுகளின் தாக்கம் அவனை இன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ, கோபமூட்டவோ செய்யலாம். அதற்கான அவனது பதில் செயல்பாடு எப்படி அமைகிறது என்பது முக்கியம். பலரது ஒருமித்த ஒரே மாதிரியான எதிரொலி சமூகத்தையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டதாகலாம். அது சாத்வீகமானதாய், அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டதாய் இருந்தால் பலனும் சிறப்பானதாய், வரவேற்கக் கூடியதாய் அமையும். மாறாகக் கனலும் நெருப்பானால், அது பெருந்தீயை மூட்டி விடலாம். அது மனித இனத்தை அழிக்கவே உதவும்.

எந்தவொரு பிரச்சனையும் உண்டாக்கும் உணர்வு சில நேரமே அதே அளவில் இருக்கும். பின்னர் மெல்ல அடங்கவே செய்யும். அந்நேரத்தில் அறிவு அந்த இடத்தை ஆக்கிரமித்து புது வழி காண்பது இயல்பு. அதற்கிடமளிக்காமல் எடுத்தவுடன் உணர்வு வழி செல்வதோ அல்லது அதே உணர்வை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதோ நம் கையில்தான் உள்ளது.

துரதிர்ஷ்டவசமாக இயேசு, காந்தி போன்ற மகான்களைத் தவிர மக்களுக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஆண்மை எல்லாருக்கும் இருப்பதில்லை. நீதியை நிலைநாட்ட, நியாயம் கிடைக்கத் துணிவோடு தவறைத் தவறென்று சுட்ட மனோபலம் வேண்டும். திருத்தவும், குற்றமிழைத்தோருக்கு மாற்றான பிரச்சனைத் தீர்வும் கொண்டிருக்க வேண்டும். அதை தார்மீக உணர்வோடு செயல்படுத்தத் தெரிய வேண்டும். சிந்தியாமல் வெறும் உணர்ச்சி மயமான முடிவுகளை எடுத்தால் அது செயல்படுவோரையும் அழித்து, எண்ணற்றோர் துன்புறவுமே வழி வகுக்கும். இந்தத் தெளிவின்மையால்தான் பல நெருக்கடிகளை மனிதன் போராட்டம், கலகம், தீவிரவாதம், வன்முறை, பயங்கர வாதம் என்கிற பல பெயர்களில் உண்டாக்கிக் கொள்கிறான்.

இதிலும் பல படிகள் உண்டு. ஆயுத பலத்தை மட்டுமே நம்பி களமிரங்குவோர் பெரிதாக சாதிப்பது ஒன்றுமில்லை. ஒரு சில ஊர்திகளை எரித்து, சில பொது உடமைகளை உடைத்து, சிலரைக் காயப்படுத்தி, பலரை பயமுறுத்தி விட்டால் அவர்கள் பெரிய வீரர்களாகி விடுவார்களா? அல்லது அவர்களுக்கு எல்லாரும் பணிந்து விடுவார்களா? அல்லது அந்தப் பிரச்சனைதான் தீர்ந்து போகுமா! அவர்களுடைய வரையற்ற ஆத்திரம் குறையலாமே தவிர தங்கள் மூடத்தனம் பின்னர் அவர்களுடைய மனச்சான்றால் புரிந்து, வருந்த நேரும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் வாழ்விலேயே அவர்கள் தவறை உணர்த்தும் அனுபவங்களை காலம் அவர்களுக்குத் தராமலா போகும்?!

பின்னர் மனம் குமைந்து, தனக்குள் மறுகுவதைக் காட்டிலும், செயல்படுமுன் அறிவை உபயோகித்தால் பிறருக்கு ஏற்படும் துன்பங்களும் இல்லாதொழியும். நாடும் அமைதியாகத் திகழும்!

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire