பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 31 mars 2014

எண்ணப் பரிமாற்றம்



அன்புடையீர்,

வணக்கம். இயல்பாக மதிக்க வேண்டிய சக உயிருக்கு,  மனித இனத்தின் சரி பாதிக்கு  அதற்குரிய மதிப்பைப் பெற்றுத் தர வேண்டி மகளிர் தினம், அன்னையர் தினம்,  பாட்டிகள் தினம் என்று எத்தனையோ தினங்களை ஒதுக்கி நினைவுறுத்தினாலும் உலக நடப்பு வேறாகத்தான் இருக்கிறது. பெண்  உயிர் வாழ, மானத்தோடு உலவ, தனக்குரிய இடத்தைப் பெற, தனக்குள்ளச்  சிறப்பை வெளிப்படுத்த இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறாள். மனிதனின் மாபெரும் வீழ்ச்சி இது. விஞ்ஞானம்,இலக்கியம் என்று அறிவால் எத்தனை உயர்ந்தாலும் உணர்ச்சிகள் என்ற அளவில் அவன் இன்னும் கற்காலத்தைத் தாண்டவில்லை என்பது எவ்வளவு அவமானத்துக்குரியது!

வேலைக்குச் சென்றால் அங்கே சம ஊதியம் இல்லை; உயர்வு இல்லை. வேலைக்கு அனுப்பாமல் அவர்களைக் காக்கவும் இன்றைய ஆணுக்குத் திறனில்லை. இத்தனைக்கும் வீட்டிலும், வெளியிலும் யாருக்கும் சளைக்காத வகையில் உழைப்பவள் அவள். பெண்மைக்கே உரிய இடர்களும், குழந்தை வளர்ப்பு போன்ற பொறுப்புகளும் அவளை பலவீனப்படுத்தினாலும் அவற்றைத் தாண்டியும் சாதனைப் படைக்க அவளால் முடியும்.

இப்புறப் போராட்டங்களைக் கூட ஒதுக்கி விடலாம். ஆனால் பெண்மையை நுகர் பொருளாய் எண்ணும் போக்குத்தான் ஆணினத்தைத் தலைக்குனிய வைக்கிறது. பெண்களின் மனதிலிருந்து அவர்களுக்குரிய இடத்தை அழிய  வைக்கிறது. காதலுக்கிருந்த புனிதம் மறைந்து வெறும் மிருக இச்சையாக அது மாறிப் போயிற்று. இன்னும் சொல்லப்போனால் அவை கூட இணக்கம் கொண்ட பிறகே, உறவு நிகழ்கிறது. 'பலாத்காரம்' என்ற இழி செயலை மனசாட்சி கொண்ட ஒரு மனிதன் எவ்வாறு செய்ய இயலும் என்று புரியமாட்டேன் என்கிறது. ஒருத்தி மறுத்து, வெறுத்து, போராடி, களைத்து, நடைப்பிணமாகி விட்ட பிறகு அவளைத் தழுவி அவன் பெறும்  இன்பம் தான் என்ன? அப்படி என்ன வெறி? அவன் உணர்வுகளை அவனாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் தன்னையே எவ்வாறு மதிக்க முடியும்? கண்ணாடியில் எப்படி தன் முகத்தைத் தானே காண்பான்? அவனால் வேறு எதைத்தான் சாதிக்க முடியும்? அவன் உயிர் வாழ்ந்துதான் என்ன பயன்?

இதை விடக் கேவலம் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி அவளைப் பல விதங்களிலும் துன்புறுத்துவது. உண்மையானக் காதல் பெண்ணைப் போற்றும். தெய்வ நிலையில் அவளைக் காணும்.அவளுக்காக எந்தத் தியாகத்தையும் ஏற்க வைக்கும். ஒருத்தியைக் காதலிப்பது ஒருவனின் உரிமை. அவளிடம் அதை வெளிப்படுத்துவதும், மன்றாடுவதும் இயற்கை. ஆனால் அவள் விரும்பாத போது வற்புறுத்த என்ன நியாயம் இருக்கிறது? அவள் முகத்தில் ஆசிட் ஊற்றுவதும், அவள் வாழ்வைக் குலைப்பதும் எந்த வகையில் ஆண்மைக்குரியது? இதில் ஒருசிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்களாம். இதனால் இவர்கள் அவள் மீது கொண்டது உண்மையான அன்பு என்று தெரிவிக்கிறார்களா!  ஒரு கோழையாக, தான் செய்த தவறுக்கானத் தண்டனையைப் பெறப் பயந்து சமூகத்தின் கண்களிலிருந்து ஓடி ஒளியும் புகலிடமாக ஏன் அவர்கள் அதைச் செய்திருக்கக் கூடாது?

இதற்கு ஆணாதிக்க மனப்போக்கை வளர்க்கும் சமுதாயமும் பொறுப்பேற்றுத்தான் ஆக வேண்டும். பெண் உடலை விளம்பரப்படுத்தி, எங்கோ நடக்கும் இந்த வக்கிரங்களை பெரிது படுத்தி, அல்லது நியாயப்படுத்தி வெளியிடும் பத்திரிக்கைகளும், ஊடகங்களும் ஒரு வகையில் தண்டனைக்குரியவை. கடுமையான முறையில் இச்செயல்களைச் சாட, சட்டமியற்றாத அரசாங்கமும் இதில் அங்கம் வகிக்கிறது. இதில் பெண்ணையே 'அவள்தான் பிறரைக் கவர்ந்து இந்நிலைக்கு ஆளாக்குகிறாள்' என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு. ஒரு பெண்ணின் இளமைக் குறுகுறுக்கும்  கண்களும், குறு நகை புரியும் இதழ்களுமே கவரத்தான் செய்யும். அதற்காக பனித்துளி சுமந்து, தென்றலில் ஆடி, ஒளி வீசும் நிறத்தால், மணத்தால் மனங்கவரும் மலர்கள் அனைத்தையும் பிய்த்து மண்ணில் எறிந்து விடலாமா?!

அன்றும் காதலும், காதல் தோல்வியும் அதன் வலியும் இருந்தன. ஆனால் அதை ஓர் உடலாசை என்று  கருதாமல், உள்ளத்தின் ஓர் உன்னத உணர்வாக மதித்ததால், அதற்கான புனிதம் போற்றப்பட்டது; காக்கப் பட்டது. இன்று பெற்ற குழந்தையையே  சொந்தம் என நினைப்பது தவறு; அது  ஓர் தனிப்பட்ட உயிர்; பருவத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே பெண்ணையோ, ஆணையோ விரும்ப வைக்கிறது என்ற வரைமுறைகள் மனித உறவுகளை மலிவாக்கி விட்டன. விளைவு, அனாதை, முதியோர் இல்லங்களும்,சமூகக் குற்றங்களும் மலிந்து விட்டன.

திருமதி சிமோன் 

பெண்களின் அசத்தலான நிகழ்வுகள்

இந்த  ஆண்டு 2014 மகளிர் தினத்தைத் தொடர்ந்து பெண்கள் அசத்தலாகச் செய்த சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து  கொள்கிறேன் .

 தனியே பறந்து திறமையை நிரூபித்த ஏர்- இந்தியா பெண்கள்:


சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கும், பின்னர் அங்கிருந்து மறுமார்க்கமாகச் சென்னைக்கும் ஏர்-இந்திய விமானத்தை முழுக்க முழுக்கப் பெண்களே இயக்கினர்.மகளிர் தினத்தில் தனது பெண் ஊழியர்களைக் கவுரவிக்கும் வகையில் பெண்களை மட்டும் பயன்படுத்தி விமானத்தை இயக்க வைக்க ஏர்-இந்தியா முடிவு செய்தது.விமானி தீபா தலைமையில் உதவி விமானி, பணிப்பெண்கள் கொண்ட பெண்கள் குழுவே இந்த விமானத்தை இயக்கியது. இதில் 85 பேர் பயணம் செய்தனர்.

பெண்களுக்காக  ஒரு தனி வெப் டிவி:

 மகளிர் தினத்தன்று பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட  இந்த வெப் டிவிக்கு ஸ்த்ரீ என்று பெயர் சூட்டியுள்ளனர்.இதில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும்.பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சுய முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொள்கிறார்கள்.ஆரம்பத்தில் தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை தர உள்ள இந்த ஸ்த்ரீ டிவி வெகு விரைவில் பல மொழிகளிலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தர உள்ளது.இந்த ஸ்த்ரீ டிவி இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒளிபரப்பாகும். அதுமட்டுமில்லாமல் இந்த டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்தவித இணைய வேக தடங்களும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.

 இளம் அருட்சகோதரியின் தொலைக்காட்சி  நிகழ்ச்சி:

இத்தாலியின் Ursuline Sisters of the Holy Family ஊர்சுலைன் திருக்குடும்பச் சபையைச் சேர்ந்தவர் அருட்சகோதரி Cristina Scuccia . இவரது வயது 25.
மார்ச் 19, 2014 அன்று  "The Voice of Italy," என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், அமெரிக்கப் பாடகரும், கவிதை எழுதுபவரும், நடிகையுமான Alicia Keys அவர்களின் “No One” என்ற பாடலைப் பாடினார். பொதுவாக இந்நிகழ்ச்சியில் போட்டியாளர் பாடும்போது நடுவர்கள், போட்டியாளரைப் பார்க்காத வகையில் பின்பக்கமாகத் திரும்பியிருப்பார்கள். பாடுபவரின் குரல் பிடித்திருந்தால் மட்டுமே அவர்கள் திரும்புவார்கள். அப்படி அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஓர் அருட்சகோதரி பாடிக்கொண்டிருப்பதையும், அவரது திறமையையும், துறவற ஆடையையும் கண்டு வியந்துள்ளனர். அருட்சகோதரி Cristina, இந்நிகழ்ச்சியில் பாட வந்ததற்கான காரணத்தையும், உண்மையிலேயே அவர் அருட்சகோதரிதானா எனவும் நடுவர்கள் கேட்டபோது, தான் உண்மையிலேயே, உண்மையிலேயே அருட்சகோதரிதான் எனவும், நான் பெற்றுள்ள இந்தக் கொடையைப் பகிர்ந்துகொண்டு நற்செய்தி அறிவிக்க வந்தேன் எனவும் கூறியுள்ளார். 

அன்பை வெளிப்படுத்த எதையும் செய்வோம்:

 தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த Gerdi McKenna என்ற பெண்ணுக்கு மார்பக புற்றுநோய். இந்த துக்கச் செய்தியை அறிந்த அவளுடைய நண்பிகள்  தோழிக்குத் தங்களுடைய ஆறுதலையும் தேறுதலையும் வெளிப்படுத்த விரும்பினார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் தலையை மழித்துக்கொள்ள முடிவு செய்தார்கள். தங்களின் இந்தச் செயலைப் புகைப்படம், வீடியோ  எடுக்குமாறு தென் ஆப்பிரிக்காவில்  உள்ள Albert Bredenhann என்ற புகழ் பெற்ற புகைப்பட  நிபுணருக்கு  அழைப்புவிடுத்தனர். அவர்  அந்த பெண்களில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு அவர்களின்  சம்மதம் பெற்றார். முடிதிருத்தும் நிலையத்தில் இந்த நிகழ்வு படமாக்கப்பட்டது.இந்தப் படபிடிப்பு முடிந்ததும் அனைவரும் தங்கள் தோழிக்குச்  சிறு விருந்து அளித்தனர். தன்னைப் போலவே மொட்டையாகி நின்ற தோழிகளைக் கண்ட  மேகேன்னா ஆனந்தக் கண்ணீர்  வடித்தாள். தன்னலமற்ற அன்பின் ஆழத்தை, அவர்களின் நட்பின் மேன்மையை என்றும் மறக்க இயலாத வகையில் பதிவு செய்ய தனக்கு வாய்ப்பு கிட்டியதைப்  பெருமையாக ஆல்பர்ட் கருதுகிறார்.
 
இப்படி வெட்டிய  முடியை CANSA (Cancer Association of South Africa) நிறுவனத்துக்கு  தானமாக கொடுத்தனர்.
தொகுப்பு: லூசியா லெபோ

சிந்திப்போம்! செயல்படுவோம்!

"எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை" என்னும் பாரதியின் கூற்று என்றைக்குமே பெண்களால் மெய்ப்பிக்கப் பட்டிருக்கின்றது; மெய்ப்பிக்கப் பட்டுக் கொண்டும் இருக்கின்றது என்பது கண்கூடு.ஆனால்,அன்று தொட்டு இன்றுவரை ஏனோ ஆண் சமுதாயம், பெண்ணை ஒரு நுகர் பொருளாகவே வைத்திருப்பதற்கு வேண்டிய வழிமுறைகளை வகுத்துச்  செயலாற்றிக் கொண்டே இருக்கின்றது. அதனுடைய நோக்கத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ, பெண்ணினமும் ஆட்பட்டுக் கிடக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது. அன்றைய காலகட்டங்களில் பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டும் என்ற காரணத்தினால், அவர்களுக்குக் கல்வி போன்ற அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டன. ஆணின் தேவைகளைப் பூர்த்தி செய்து, வெறும் பிள்ளை பெற்றுத்தரும் கருவியாகவே பயன்படுத்தப் பட்டு வந்ததால் . அவளுடைய  உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உரிய  மதிப்பும் அளிக்கப் படவில்லை. இன்று. எத்தனையோ பெண்கள் கல்வி, அரசியல், பொருளாதாரம், போன்ற பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். அதற்காகப் போராடிய எத்தனையோ ஆண்களும் உண்டு. அவர்களெல்லாம் வணக்கத்திற்குரியவர்களே; என்னதான் பெண்கள் முன்னேற்றம் பற்றி ஒருபக்கத்தில்  பேசிக்கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெண்மையை இழிவு படுத்தும் நிகழ்ச்சிகளும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

பெண்களின் பாதுகாப்பற்ற இன்றைய நிலைக்கு என்ன காரணம் என்று பல்வேறு கோணங்களில் கருத்துக் கணிப்புச் செய்து பார்த்த போது, அதில், முக்கியமாகப் பெண்கள் அணியும்  அரைகுறை உடை என்னும் பதிலே முதலாவதாக வருகின்றது. இந்த உண்மையை மறுப்பதற்கோ ஐயப் படுவதற்கோ ஏதுமில்லை . இன்றைய நாகரிகம், சுதந்திரம் என்னும் பெயரால் பெண்களின் 'உடை' கலாச்சாரம் இருக்கின்றது என்பதையும்  நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். நாம் வாழ்கின்ற இடத்திற்குப் பொருந்தக் கூடிய உடைகளே நமக்குப் பாதுகாப்பானது என்பதைப் பெண்கள் உணர வேண்டும். மற்ற நடவடிக்கைகளும் அப்படியே. மேல்நாட்டு நாகரிகம் என்ற பெயரால் இன்று நம் நாட்டில் புகுந்துள்ள பல கலாச்சாரச் சீரழிவுகளே எல்லா கேடுகளுக்கும் காரணம். மேல்நாட்டினரைப் பார்த்துப் பின்பற்ற வேண்டிய, காலம் தவறாமை, தூய்மை,சுற்றுப்புறச் சூழல் போன்று எத்தனையோ ஆரோக்கியமான பண்புகள் இருக்கும்போது, குளிர்  நாடுகளில் வாழும் அவர்களைப்போல் உடையணிவதும் கொண்டாட்டங்கள் செய்வதும் நம் சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றன. ஆண் பெண் யாராக இருந்தாலும் அவரவர் மனம்போல் வாழலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பண்பாடு, கற்பொழுக்கம் என்பதெல்லாம் மேல்நாட்டவருக்குப் பெரிதில்லை. அதனால் உடை விஷயத்திலும் அவர்கள் அப்படியே. ஆனால்  நாம் ஒரு கட்டுக்கோப்பான கலாச்சாரத்தைச் கொண்டிருப்பதனால் பெண்மைக்குக் களங்கம் ஏற்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல் உடையணிவதும், சுதந்திரம் என்ற பெயரில் நேரம் கேட்ட நேரங்களில் வெளியில் சுற்றித் திரிவதும் நல்லதல்ல.
உலகில்  இன்று எல்லாப் பொருட்களும் பெண்களை விளம்பரப் படுத்தியே சந்தைப் படுத்தப் படுகின்றன. அரைகுறை ஆடையோடு பெண்களின் அங்கங்களைக் காட்டினால்தான் விளம்பரங்கள் கூடப் பார்க்கப்படும் அவல நிலைதான் நிலவுகின்றது. அன்று பெண்களை அடக்கி, அடைத்து வைத்த சமுதாயம், இன்று,பெண்களுக்குச் சுதந்திரம் உரிமை என்ற பெயரால் மூளைச் சலவை செய்து,அவளின் அங்கங்களை ஆபாசமாக விளம்பரப் படுத்திப் பணம் பண்ணும் செயலில் வெற்றி கண்டுள்ளது. எப்படி இருந்தாலும் பெண் என்பவள் எதோ ஒரு வகையில் ஆணின் அனுபவப் பொருளாகவே இருக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. பெண்கள் இதை ஒருநொடி சிந்தித்துத் தமக்குத் தாமே சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டு எப்போதும் செயல்பட வேண்டும்.  விபத்து எதிர்பாராமல் எப்போதோ  நடப்பது. நாமே தேடிச் செல்வதல்ல. அரசாங்கம் ஆயிரம் பாதுகாப்புத் தந்தாலும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது  நமது கடமை!
திருமதி .சரோசா தேவராசு

வியப்பான செய்திகள்


சாராவின் அதிசய மாளிகை

கலிபோர்னியா நகரில் ஒருவீடு. சாரா வின்செஸ்டர் என்ற பெண்ணுக்குச் சொந்தமானது. பெரும் செல்வந்தர் குடும்பத்தில் 1840 -இல் பிறந்தாள். 1862 -இல் வின்செஸ்டர் என்பவருடன் திருமணம்.  இவர் ஆயுத கிடங்குக்கு உரிமையாளர். இவர்கள் குழந்தை சிறுவயதிலேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டது. 1881 -இல்   கணவனை இழந்தாள். அடுக்கடுக்கான
தன்னுடைய சோகத்துக்குக் காரணம் அறிந்து பிராயசித்தம் செய்ய  விரும்பினாள். அவள் கணவரின் குடும்பத்தாரால் கொலை செய்யப்பட்ட மக்களின் ஆன்மா சாந்தி பெரறும் பொருட்டு அந்த ஆவிகள் தங்க ஒரு மாளிகையை கட்டுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டாள். 
1884 -ஆம் ஆண்டு சாந்தா க்ளாரா என்ற இடத்தில் உள்ள 8 அறைகள் கொண்ட கட்டி முடிக்கப்படாத பண்ணை வீட்டைச் சாரா வாங்கினாள்.அவள் திட்டமிட்டபடியே அந்த வீடு கட்டப்பட்டது. வருடத்தின் 365 நாட்களும் இரவும் பகலும் வேலை தொடர்ந்து கொண்டே இருந்தது.38 ஆண்டுகள் வேலைகள் நடந்த நிலையில் ஒரு  நாள் - 1922 ஆம் ஆண்டு  சாராவின் திடீர் மரணத்தால் கட்டிடவேலை  நிறுத்தப்பட்டது. அவள் இறந்த போது அவள் கட்டியிருந்த மாளிகை ஆறு ஏக்கர் நிலப்பரப்புக்கும் அதிகமான இடத்தை  ஆக்கிரமித்திருந்தது. மாளிகையில் 160 அறைகள் உள்ளன.பல அறைகள் பயன்படுத்தப்படவே இல்லை. சில அறைகளின் அகலம் வெகுசில அங்குலங்களே இருந்தன. மாளிகையில் இருக்கும் மாடிப்படிகள் எங்கே போகிறதென்றே தெரியாது. சாளரங்கள் வெற்றுச் சுவரை நோக்கி இருந்தது. ஏழுமாடிக் கட்டிடமான  இதில் 3 லிப்டுகள். 2,000 கதவுகள். 10,000 ஜன்னல்கள், பல மைல்கள் நீளத்துக்கு ரகசியப் பாதாளப் பாதைகள் உள்ளன.

வின்செஸ்டர் மாளிகை என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் இன்று ஒரு மியூசியம். உலகின் விந்தையான இம்மாளிகையைக் காணப் பலரும் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை திகைக்கவும், ஆச்சரியபடவும் வைக்கும் மாளிகையாக  இது  திகழ்கிறது. 


23 ஆண்டுகளில் தனது 17வது குழந்தைக்கு காத்திருக்கும் தாய்  


திருமணமான 23 ஆண்டுகளில் தனது 17 -ஆவது குழந்தையின் வரவுக்காக சந்தோஷமாகக் காத்திருக்கும் தாய் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். லங்காஷயரின் மோர்கம்பே என்ற இடத்தில் வசித்துவரும் நோயல்(41), மற்றும் அவரது மனைவி ஸ்யு ரட்போர்ட்(38) என்ற இருவரும் பேக்கரி ஒன்றினை நடத்தி வருகின்றனர்.
திருமணமான இந்த 23 வருடங்களில் ஒவ்வொரு 17 மாத இடைவெளியிலும் அவர்கள் வீட்டில் ஒரு புதுவரவு தோன்றும். 2011 -ஆம் ஆண்டில் இவர்களது குடும்பம் பற்றி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரியான ’15 கிட்ஸ் அண்ட் கவுண்டிங்’ இவர்களை வெளியுலகில் பிரபலப்படுத்தியுள்ளது.
இவர்களது 16 -ஆவது மகன் காஸ்பர் சென்ற வருடம் (2012) அக்டோபர் மாதம் பிறந்தான்.தற்போது 11 மாத இடைவெளியில் தான் மீண்டும் தாயாகப் போவதை ஸ்யு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தங்கள் குடும்பத்துடன் இணையப் போகும் புதுவரவு குறித்துக் கணவன், மனைவி இருவருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஒன்பது அறைகள் கொண்ட வீட்டில் வசித்துவரும் இவர்கள் தங்களின் போக்குவரத்திற்காகச் சிறிய பேருந்து ஒன்றினையே வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பெண் விமானி:

 ஆண்களே  கார் ஓட்டுவது  அரிதாக இருந்த காலகட்டத்தில், சரளா விமானியானது  செயற்கரிய வியப்பூட்டும் சாதனை. சுதந்திரதிற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இந்தியாவின், தற்கால பாகிஸ்தானின் லாகூரில் (Lahore,  Pakistan) பி.டி. ஷர்மா ( P. D. Sharma) என்பரைத் தனது 16 வயதில் மணந்த சரளா  1914 -இல் பிறந்தவர்.  இவரது கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமாக ‘ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி’  (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது.   பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும்  (Badrinath and Haridwar) இடையே அந்நிறுவனம் தன் பயணச் சேவையை நடத்தி வந்தது.  சரளாவின் கணவர் குடும்பத்தில் அந்நாட்களில் 9 பேர் விமானியாக இருந்தார்கள்.  முதன் முதலில் ஏர்மெயில் விமானியாக (airmail pilot’s licence) இந்தியாவில் உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி.டி. ஷர்மாதான். அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில்  பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.தனது மனைவி சரளாவையும் விமானியாக்க அவரது கணவர் ஆர்வமுடன் இருந்தார்.  அவரையும் விட  கணவர் ஷர்மாவின் தந்தை மிகவும் தூண்டுகோலாக இருந்து மருமகளை ஊக்குவித்து வந்தார்.  தனது மகனிடம் அவர் சரளாவிற்கு விமானப் பயிற்சியைத் துவக்க வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.  ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரமில்லாததால்  தானே தனது மருமகளை “லாகூர் ஃப்ளையிங் கிளப்” (Lahore Flying Club) இல் சேர்த்து ‘டிம்மி தஸ்த்தூர்’ (Timmy Dastur) என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார்.அவர் சரளாவிற்குச்  சரியாக  8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார்.  தனது கணவர் பணியிலிருந்து வரும்வரைக் காத்திருந்து அவரது அனுமதியுடன் 1936 -ஆம் ஆண்டு ‘ஜிப்சி மாத்’ (Gypsy Moth) என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார்.  அப்பொழுது நான்கு வயது மகள்  ஒருத்திக்கு இளந்தாயாக இருந்த சரளாவிற்கு வயது 21 தான்.  தான்  வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார்.



 வர்த்தக விமானங்களை ஓட்டும் பயிற்சி பெற்றுத் தன் கணவரைப் போலவே விமானியாக விரும்பினார்.இரெண்டாம் உலக போர் மூண்டதால் அவர் பயிற்சியைத் தொடர முடியவில்லை. இதை அடுத்து அவள் வாழ்க்கையில் பல சோகங்கள். விமானிகளாகிய அவள் கணவரும் மைத்துனரும் அடுத்தடுத்து விமான விபத்தில் இறந்தனர். 23 - 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விதவையான அவளுடைய ஆசை நிறைவேரமால் போயிற்று.
லாகூர் கலைக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் நுண்கலையைச் சிறப்புப் பாடமாகப் பயின்றார். 1948 -இல் P P Thakral என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இன்றும் தனது  98 வயதில் சுறுசுறுப்பான  தொழில் அதிபராக விளங்குகிறார்.