பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 31 décembre 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். "புதியதோர் உலகம் செய்வோம்" என்று பாடத் தூண்டியது, நிச்சயம் இருக்கும் குறைகளை நீக்க வேண்டும் என்ற பேராவல் தான். மனிதன் எத்தனை நிறை அம்சங்களைக் கொண்டிருக்கிறானோ, துரதிஷ்டவசமாக அத்தனை குறைகளையும் தன்னகத்தே அடக்கியுள்ளான். இந்தப் போராட்டம் தனி மனித வாழ்வில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் தொன்று தொட்டு இருந்தே வருகிறது.

நீதியும், நேர்மையும் அடிபட்டு போவதும், எளியோரை உருக்குலைப்பதும், சுயநலம் தலை விரித்தாடுவதும், வேறு வழியின்றி உண்மை ஊமையாவதும் அன்று முதல் பெறும் அனுபவமே! ஒவ்வொரு காலத்தில் இவை ஒவ்வொரு வடிவத்தில் சவாலாக மனித இனத்துக்கு இருக்கிறது. சர்வாதிகள் நெறி பிறழ்ந்ததிலிருந்து, இன்றைய அரசியல்வாதிகளோ அல்லது பண பலம் கொண்ட முதலாளிகளோ முறை கெடுவது வரை, அதன் தாக்கம் அடி மட்ட சாமானியன் மீது விழுவதைத் தடுக்க இயல்வதில்லை!

இரை தேடி அலைவதொன்றே வாழ்வு என்றிருந்தவன், என்று விளைச்சலும், தன்னிறைவுமாக வாழ ஆரம்பித்தானோ அதுவே அவனது பொற்காலம் என்றாயிற்று! அதில் திருப்தியுறாமல், மேலும், மேலும் சேர்க்க ஆரம்பித்ததன் விளைவுதான் இன்றைய நிலை! பணத்துக்காக எதையும் செய்தும் பூரண அமைதி பரவியபாடில்லை. இல்லாமை பரவிக்கொண்டே போக, குற்றங்களும், நோயும் மலிய, சேர்த்தவனும் அவற்றுக்கு பலியாகவேண்டி உள்ளது.

இந்நிலையை மாற்ற நினைத்த நல்லுள்ளங்கள் உலகம் முழுதிலும் ஒவ்வொரு வழியில் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

 இரண்டாம் உலகப் போரில் மீந்து போன வெடிமருந்து உப்பை ரசாயன உரமாக்கி இயற்கையைக் கெடுத்து, தட்ப-வெட்ப நிலை மாறி அவதியுறும் உலகைக் காக்க, வீணே பயன்படாதிருக்கும் நிலத்தில் இயற்கை உர விளைச்சலை (காய்கறிகள், பழங்கள் போன்றவை) மேற்கொள்ளுவதுடன், பலனை எல்லோருக்கும் இலவசமாகப் பகிர்ந்தளிக்கும் முறை எங்கும் பரவி வருகிறது. இதன் மூலம் 'விலை நிர்ணயிப்பு' என்றப் போர்வையில் பணம் திரட்ட வழி மூடிப் போவதுடன், எல்லோருக்கும் சத்துள்ள உணவு கிடைக்கிறது.

பண்ட மாற்று முறையில் தன்னிடம் உள்ளதை, அது தோட்டத்தில் விளைந்ததோ அன்றி சமைத்ததோ தேவைப்படுவோருக்கு அளித்து விட்டு, அவர்களிடம் உள்ளது தனக்குத் தேவை என்றால் அதைப் பெறும் முறை ஒன்று 'புட் ஸ்வாப் நெட்வொர்க்' என்ற பெயரில் நடைபெறுகிறது. உணவு மட்டுமல்லாது, துணிகள், பொருட்கள் எனவும் இதை விரிவுபடுத்துகிறார்கள்.

இதையும் தாண்டி, திறமைகளை இலவசமாகப் பகிர்தலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை பழுது பார்க்கத் தெரிந்தவர்கள், தேவைப்படுவோருக்கு செய்து கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக, வீடு கட்டத் தெரிந்தோரின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவி செய்து, அவர்களால் செய்ய முடிந்த தன்  தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். 

இவை அவரவர் தேவையை இலவசமாக நிறைவேற்றிக் கொள்ள மட்டும் உதவவில்லை. பண அரக்கனை ஒழித்துக் கட்டுவதோடு, ஒருவர் திறமையை மதிக்கவும், பரஸ்பரம் நேயம் கொள்ளவும், அதன் மூலம் நல்லிணக்கம் கொள்ளவும் வைக்கிறது. பேதங்கள் மறைய இது ஓர் நல்ல வழி. சாதிச் சண்டை, மத வெறுப்பு போன்ற இதுவரை தீர்க்க இயலாத பிரச்சனைகள் கூட இதன் வழியாக இல்லாது போகும்.

கீதையில் கண்ணன் கூறிய "எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்!" என்ற பாதையை நோக்கி செல்கிறோம் என்பதற்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு!

உலகை அனைவரும் இன்புறும் ஓர் சொர்க்கமாக மாற்ற இப்பாதை தொடரட்டும். இயற்கை வளங்கொழிக்கும் பூங்காவாய் அது மாறட்டும். இன்று இது கனவுலகோ என்ற ஐயத்தை எழுப்பினாலும், தொடர் முயற்சியால் மனிதனால் ஆகாதது எதுவுமில்லை என்கிற உண்மை நம்பிக்கை அளிக்கட்டும்!

திருமதி சிமோன்

காதல் பரிமாற்றம்




துளையிட்ட உன்(என்)பார்வை என்(உன்)நெஞ்சில் பாசத்

தூதாகி, இதமாகி, பதமான மனதில்

முளைவிட்ட எண்ணங்கள் மூண்டுவர, அன்பு

முகைத்தெழுந்து முந்திவர, முற்றிநின்றக் காதல்

கிளைவிட்டு, நினைவலைகள் குறுகுறுக்கும் உணர்வில்

கிட்டிவரும் உறவின்பால் கிளர்ந்துவிடும் மோகக்

களைகளைந்து, பொங்கிவரும் பெருமழையாய் உன்(என்)னில்

கலந்திடுமோர் துடிப்பினிலே கரைகின்றேன்(றாய்) நானே(நீயே)!

திருமதி சிமோன்

சங்க இலக்கியங்களில் பண்டமாற்று


சங்க காலச் சமுதாயத்தில் நிலப் பிரிவுகளுக்கு ஏற்ற தொழில் முறைகள் மாறு பட்டாலும் ஒரு நிலத்தாருக்கும் மற்றொரு நிலத்தாருக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்தது.  ஒரு நிலத்தில் கிடைக்கும் பொருள்களை ஏனைய நிலத்திற்குக் கொண்டு சென்று பண்டமாற்று முறையில் வணிகம் செய்து வந்தனர். அதனால் பண்டைக்காலத்தில் உணவு, பொருள், மொழி ஆகியவற்றில் பரிமாற்றம் ஏற்பட்டது.  கைத்தொழிலாளர் தாங்கள் உருவாக்கிய சட்டி பானைபாய்கூடைமரப்பெட்டிவிசிறி  முதலான பொருள்களைத் தந்து மாற்றுப் பொருள் வாங்கினர்உடலுழைப்பைத் தந்து அதற்கு ஈடாய் ஏதாவது பொருள் பெற்றனர். அதிக விலையுள்ள பொருள்களை மட்டுமே தேவை கருதி காசு கொடுத்து வாங்கியுள்ளனர்.அன்றைய தமிழகத்தின் பண்டமாற்று முறையினை சங்க இலக்கியங்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளன.

ஓர் இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாய்த் தானியத்தைப் பெற்றுக்கொண்டதை முதுகூத்தனாரின் குறுந்தொகைச் செய்யுள் விளக்குகிறது.
 பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்  (குறுந்தொகை 221)

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
( நற்றிணை - 183)
மருத நிலத்தைச் சேர்ந்த உப்பு வணிகர்கள் தம்முடைய நாட்டின் வெண்ணெல்லைக் கொடுத்து, நெய்தல் நிலப் பகுதியின் உப்பைப் பெற்று வந்து விலை கூறுகின்றனராம். கொள்ளை என்கிற சொல் கொண்டும் கொடுத்தும்  செய்யப்படுகிற வணிகத்தின் அதாவது பண்டமாற்று அடிப்படையில் உருவான சொல்லாகும் என்பதை அறியமுடிகிறது.

பண்டமாற்று முறையில் நடைபெற்ற உள்நாட்டு வணிகத்தில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டதற்கான குறிப்புகள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன
ஊர்த் தெருக்களில் உப்பு விற்ற உமணப் பெண் நெல்லுக்கு அதை மாற்றியதை அம்மூவனார் காட்சிப்படுத்துகிறார்.இதோ அந்த பாடல்:

கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரி விலைமாறு கூறலின்.  (அகம்.140-5-8)

'நெல்லின் நேரே வெண்கல் உப்பு ' - நெல்லின் அளவுக்கே உப்பும் விற்கப்பட்டது என்பதனால் உப்பு எவ்வளவு உயர்ந்த பொருளாக மதிக்கப்பட்டது என்பது விளங்கும். சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுக்களில் இருந்து தெரிகிறது.
கீழ் வரும் பாடலும் இதை உறுதிப்படுத்துகிறது எனலாம்.
நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீ ரோஎனச் சேரிதொறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமைத்தோ ளாய்நின் (அகம் 390)

ஒருத்தி நெல்லை ஏற்காமல் கழற்சிக் காய் அளவிலான முத்துக்களையும் ஆபரணங்களையும் பண்டமாற்றுப் பெறுகிறாள். இதனைப் பாடல் 126 -ஆல் அறியலாம்.
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி

யவனர் தம் அழகான வேலைப்பாடு அமைந்த மரக்கலங்களில் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, மிளகை ஏற்றிச் செல்லும் செய்தியை  அகநானூற்றின் 149 -ஆவது பாடல் விவரிக்கிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி
(கறி = மிளகு)

வேடர் தேனையும், கிழங்கையும் கொணர்ந்து மதுபானக் கடையில் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வறுத்த மீன் இறைச்சியையும், மதுவையும் வாங்கி உண்டதையும், உழவர் கரும்பையும் அவலையும் கொண்டுவந்து கொடுத்து, அதற்குப் பதிலாக வறுத்த மான் இறைச்சியையும், மதுவையும் பெற்று மகிழ்ந்ததையும் முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுபடையில்  கூறியுள்ளார்.

தேனெய் யடு கிழங்கு மாறியோர்
மீனெய் யடு நறவு மறுகவும் .
தீங் கரும்போ டவல் வகுத்தோர்
மான் குறையடு மது மறுகவும்

கொல்லிமலையில் காந்தள் மிகுந்த காட்டில் உள்ள சிறுகுடி மக்கள் அருவியைச் சார்ந்திருக்கும் நிலத்தில் ஐவன நெல் விதைத்து உழவு தொழில் செய்து வந்தனர். அவர்கள் பசியால் வாடும் நிலை வரின் தம் வசமிருந்த யானைத் தந்தங்களைத் தானியத்திற்கு மாற்றி, சோறு சமைத்து உண்டனர் என்பதை
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென
கடுங்கண் வேழத்துக் கோடு உண்ணும் (குறுந்தொகை - 100)
கபிலர் பாடலால் அறியமுடிகிறது.

சினம் மிக்க வேட்டை நாய்களையுடைய வேடன், மான் தசை வைக்கப்பட்ட 
ஓலையால் புனைந்த பெட்டியும் இடைச்சியர் குடம் நிறைய தயிரும் கொண்டுவந்து கொடுக்க, ஏரால் உழுதுண்டு வாழும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர் அவற்றை பெற்றுக்கொண்டு வைக்கோலும் பதறும் களைந்த தூய்மையான நெல்லை மாற்றாக கொடுப்பார்கள் என கோவூர்கிழார் புறநானூற்றில் பாடியுள்ளார் (பாடல் 33)

கான் உரை வாழ்க்கைக் கதநாய், வேடுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப , உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்
                                
சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு மாறி வர உப்பங்கழனிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது – கல்லாடனார் பாடல்(குறுந்தொகை 269)



(பெரும்பாணாற்றுப்படை அடிகள் 164 முதல் 166 வரை .)        
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ

என்பதால் நெய் விற்ற ஆயமகள் பொற்காசுகளை வாங்காமல் கன்றோடு கூடிய பால் எருமைகளை வாங்கிய செய்தியை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடலால் அறிகிறோம்.
  
ஆயர்களின் ஆட்டு மந்தைக்கு அருமையான உவமையை பெருங்கெளசிகனார் காட்டுகிறார் -மலைபடு கடாம்  (413-414)
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன 
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
பண்ட மாற்றுமுறை வணிகத்தில் பலரிடம் தம் பொருளை விற்று அவர்களிடமிர்ந்து பெற்ற பல நிற அரிசிகள் ஒன்றாய்க் கலந்திருந்தால் எப்படி இருக்குமோ அது போன்ற பல நிறமுள்ள ஆடுகளைக் கொண்ட ஆட்டு மந்தையாம்.
இன்னும் பல எடுத்துக்காட்டுகள் கூறிக்கொண்டே போகலாம். நம் தமிழரின் வாழ்க்கைமுறை அக்காலம்தொட்டே சிறப்பாக இருந்ததையே இவை காட்டுகின்றன. 

லூசியா லெபோ

மதுரை மாவட்ட கிராமங்களில் பண்டமாற்று



மதுரை மாவட்ட கிராமங்களில் பண்டமாற்று முறை இப்போதும் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 11 ஆயிரம் ஏக்கரில் தற்போது முக்கால்வாசி இடங்களில் நெல் அறுவடை செய்யப்பட்டுவிட்டது. எஞ்சிய பகுதிகளில் தொடர்ந்து அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிறு வியாபாரிகள் சிலர் ஆட்டோ, மினி வேன்களில் சென்று கிராமங்களில் பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஒன்றியங்களில் காலையிலேயே இதுபோன்ற வாகனங்களில் வரும் வியாபாரிகள், ஒலி பெருக்கிகள் மூலம், ஒரு படி நெல்லுக்கு ஒண்ணரை படி உப்பு... அம்மா வாங்க... அய்யா வாங்க... புளியங்கொட்டை கொடுத்தும் உப்பு வாங்கிக்கலாம். கடையில் ஒரு கிலோ பொடி உப்பை 15 ரூபாய்க்கு விற்கிறான். நாங்க பொடி உப்பை படி 6 ரூபாய்க்குத் தர்றோம். வாங்கம்மா வாங்க” என்று கூவுகிறார்கள்.
உடனே, சில பெண்கள் வீட்டில் இருந்து ஒரு படி நெல்லைக் கொண்டுவந்து கொடுத்து, பண்டமாற்று முறையில் உப்பைப் பெற்றுக் கொள்கின்றனர். புளியங்கொட்டை, வேப்பங்கொட்டையைச் சேகரித்து வைத்திருக்கும் மூதாட்டிகளும் ஆர்வமாக வந்து உப்பு வாங்கிச் செல்கின்றனர். அடுத்த சில மணி நேரத்தில், மற்றொரு வேன் வருகிறது.
பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு: உங்கள் வீட்டில் உள்ள அரசு டி.வி. எந்த நிலையில் இருந்தாலும் சரி, அதைப் பெற்றுக்கொள்ள உங்கள் வீடு தேடி வந்திருக்கிறோம். ஓடாத, பரண் மேல் வீசப்பட்ட டி.வி.களையும் 250 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.
வாங்கம்மா... வாங்க... இந்த வாய்ப்பைத் தவற விட்டால், இரும்புக் கடையில் 25 ரூபாய்க்குக்கூட விற்க முடியாது என்று என்னமோ அரசின் நேரடி ஊழியரைப் போல உரிமையாகக் கேட்கின்றனர். பொதுமக்களும் டி.வி.யைக் கொடுத்துவிட்டு காசு வாங்கிச் செல்கின்றனர்.
டி.வி. வாங்கிய வியாபாரியிடம் கேட்டபோது, கடந்த ஆட்சியில் அரசு வழங்கிய டி.வி.யை டெண்டர் எடுத்து, டி.வி. தயாரித்துக் கொடுத்த நிறுவனங்களின் சார்பில், மதுரையில் ஒருவர் பழைய டி.வி.களை கொள்முதல் செய்து கொண்டிருக்கிறார்.
அதைத் திரும்ப கம்பெனிக்கே கொடுக்கப் போவதாகச் சொன்னார்.
250 ரூபாய்க்கு பொதுமக்களிடம் இருந்து டி.வி.யை வாங்கி அவரிடம் கொடுத்தால், ஒரு டி.வி.க்கு ரூ.500 வரை தருவார். அதனால் வாங்குகிறோம். காசுக்குப் பதில் பொருளாகத் தந்தால் நல்லாயிருக்கும் என்று கேட்கிறார்கள். எனவே, நாளை முதல் ஒரு டி.வி.க்கு ஒரு பிளாஸ்டிக் சேர் கொடுக்கலாம் என்று யோசித்திருக்கிறோம் என்றார். 

நன்றி: தி இந்து 25 11 2013

துணுக்குச் செய்திகள்

  •   தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயும் பண்டமாற்று வர்த்தகம் நடைபெறுகிறது. இதற்காக தனியாக பார்டர்மேனியாக் டாட் காம் ( bartermaniac dot com) என்ற இணையதளமே உள்ளது.

  • இந்த இணைய தளத்தின் தலைமை செயல் அதிகாரி விபுல் ராவல் ஆவார். தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும் கூட, பல நாடுகளில் பண்டமாற்று வர்த்தகம் நடத்தும் நிறுவனங்களின் வியாபாரம் 15 முதல் 60 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக  அவர் கூறுகிறார்.

  •  பல்வேறு நாடுகளில் மொத்த வர்த்தகத்தில் 30 விழுக்காடு வர்த்தகம், பண்டமாற்று முறையில் நடைபெறுகிறது. ஆனால்  இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில், பண்டமாற்று வர்த்தகம் 10 முதல் 12 விழுக்காடே என்று  புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகிறது.

  • உலக அளவில் பெரிய நிறுவனங்களான பார்ச்சூன் இதழில் இடம் பெற்றுள்ள 500 நிறுவனங்களில், ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் பண்டமாற்று வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன.

  • நியுயார்க் பங்குச் சந்தை பட்டியலில் உள்ள 65 விழுக்காடு நிறுவனங்கள், பண்டமாற்று வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா யூனிவர்சல் பார்டர் குரூப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

  • செல்போன், மோட்டார் பைக், கார், தொலைகாட்சி உட்பட பல்வேறு பொருட்கள் பண்டமாற்று முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு உங்களிடம் உள்ள பழைய மாடல் செல்போனை குறிப்பிட்ட தொகைக்கு கொடுத்துவிட்டு, புதிய மாடல் செல்போனை வாங்கிக்கொள்ளலாம். புதிய மாடல் செல்போன் விலையில், நீங்கள் கொடுத்த பழைய செல்போனுக்கு குறிப்பிட்ட விலை நிர்ணயித்து கழித்துக் கொள்ளப்படும். மீதம் உள்ள ரூபாயை கொடுத்து புத்தம் புதிய செல்போனை வாங்கிக்கொள்ளலாம். இந்த மாதிரியான திட்டங்களை எல்லா நிறுவனங்களும் அறிவிக்கின்றன. 
  •  உலகிலேயே இதுவரை நடந்த மிகப் பெரிய பண்டமாற்றுதல் என்ன தெரியுமா? 1984 ஜூலை மாதம், ராயல் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், 36 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் கொடுத்து பத்து போயிங் 747 விமானங்களை பெற்றதுதான்!

dimanche 30 novembre 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். தனிமை என்பது மிகக் கொடுமையானது என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே பலர் வெளியே சுற்றுவதும், புடை  சூழ இருப்பதும் பாதுகாப்பானது, தனிமையிலிருந்து காக்கும் வேலி  என எண்ணுகின்றனர். நோயுற்றிருக்கும் போதோ, அன்றி தானியங்க இயலா நிலையிலோ நிச்சயம் யார் உதவியேனும் அவசியம்தான். மேலும் மனித வாழ்வே இன்னொருவர் உதவி இன்றி நகர்த்த இயலாதது. அதனால் இந்தத் தனிமை பற்றி சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால் "மனம்" பெரும்பாலும் தனித்து இயங்குகிறது. தனக்கே உரிய எண்ணங்கள், கனவுகள், அனுபவங்கள், விருப்பு-வெறுப்புகள், இவை பற்றிய அலசல்கள் என அது ஓர் தனி உலகம். இதன் வெளிப்பாடுதான் பலர் நடுவிலும் சில வேளைகளில் ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுதல். உணர்வுகள் அதன் வயப்பட்டு விடுவதால் பிறரது உடனிருப்பு கூட அவசியமற்றதாகவோ, இடஞ்சலாகவோ தோன்றிவிடுகிறது. அப்படியானால் பிறரை நாம் நமது வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறோமா?!

சுயநலம் எனக் கொள்ளா விடினும், "நாம்" என்ற உணர்வுக்கு "பிறர்" என்கிற பந்தம் எந்த அளவு அவசியம், "தன்னிருப்பு" என்பதற்கு "இரண்டாமவர்" தேவையா என்ற விளக்கம் இந்தத் "தனிமை" பற்றிய பயத்துக்கு உரிய பதிலாக அமையும். கூடி வாழ்ந்த காலத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தபோதும், மனித நேயம் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ள வைத்தது. இன்று வாழ்க்கை முறைகளாலும், மன பேதங்களாலும், கடமை உணர்வு குன்றியதாலும் பலர், குறிப்பாகக் குழந்தைகளை ஆளாக்கியப்  பிறகு வரும் நாட்களில்  பெற்றோர் தனிமைப் பட்டுப் போகிறார்கள்.

எந்த வயதில், என்னக் காரணத்துக்காக இருந்தாலும் "தனிமை" வயதால் மாறி விடப் போவதில்லை. "தனியாக வந்தோம்-தனியாகவே செல்வோம். இதில் உறவென்ன, பகை என்ன!" என்று வேதாந்தம் உண்மையைத்தான் அறைந்தாற்போல் உரைக்கிறது. இன்பம் என்றாலும், துன்பம் என்றாலும் ஒவ்வொருவருடைய மன நிலைக்கு ஏற்றாற்போல் "அனுபவித்தல்" தனியே, தனக்குள் மட்டுமே நடக்க முடியும். 'தலை வலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் தெரியும்' என்பது கூட நம் உணர்வுகளை எவ்வகையிலும், யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது என்பதையே உணர்த்துகிறது.

எனவே "தனிமை" கண்டு பயந்து போவதிலோ, புலம்புவதிலோ எந்த அர்த்தமும் இல்லை. நம் மனதை, எண்ணங்களை, உணர்வுகளை சமன்படுத்த அறிந்து கொண்டால் போதும். ' துக்கத்தில் மூழ்குவது தன்  புண்ணைத் தானே சொரிந்து கொள்வது போன்றது' என்று அபத்தமாகக் கூறுவார்கள். பொங்கி வரும் உணர்வலைகளில் துயரமும் இருக்கும். நிறைவும் இருக்கும். வாழ்வே இரண்டும் கலந்ததாக இருக்கும் போது, ஒன்றை மட்டுமே நினைவில் கொள்வது இயலாதது. வருந்த நேர்ந்தால், அதற்கேற்ற வடிகாலும் உண்டு. கண்ணீரே ஒரு வகை விடுதலை தான்.

துயரப்படும் மனதுக்கு உரமூட்டவும், நம்பிக்கை இழந்த நிலையில் பிடிப்பேற்படுத்தவும் அறிந்து கொள்ள வேண்டும். தனக்குத் தானே இயலாவிட்டால்  புத்தகங்களோ, பாடல்களோ உணர்வுகளை மாற்றலாம். செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் இயங்கினால் தன்னை மறக்கலாம். வாழ்வின் உண்மையான "நிலையாமை" புரிந்து விட்டாலே அமைதி உண்டாகி விடும். இறை நம்பிக்கை இதற்கு வலுவூட்டும். பாரத்தை "சரணாகதி" அடைந்து விட்டால் இறக்கி விடலாம். பிறகு "தனிமை" "இனிமை" ஆகவே மாறிவிடும்!

திருமதி சிமோன்


தனிமை போக்கும் நினைவுகள்



 விண்ணில் மிதக்கும் விண்முகில்போல்

    விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல் 

கண்ணின் பார்வை தொலைநோக்கக் 

   காணும்   உலகம்  விரிந்தோடத்

தண்ணீர்  மீதின்  காட்சிகள்போல் 

   தளிர்ந்து  மனத்தில் சஞ்சரிக்க 

என்னுள்  வாழ்ந்து  எழுச்சியுறும்

     இறந்த  கால   நினைவுகளே !


பள்ளிப்  பருவ  நாளங்கே  !

   பாடித்  திரியும்  நண்பரங்கே !

சொல்ல இயலாச் சிரிப்பங்கே !

   துயரம்  தாளா  மனதங்கே !

செல்லம் கொடுக்கத்  தாயங்கே !

 சிந்தை ஊக்கும் தந்தையங்கே !

உள்ளம் என்னும் உலகினிலே 

   உலவித் திரியும் நினைவுகளே !


இன்ப துன்ப நினைவெல்லாம் 

    இறந்த  கால மனச்சின்னம் !

இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை  

     எளிதாய்  முடிக்க வழிக்காட்டி !

என்றும்  வாழ்வுப் பயணத்தில்  

     இணைந்துச்  செல்லும் வழித்தோழன் !

இன்றுச்  செய்யும் செயல்கள்தான்

     இனிமேல்  மாறும்  நினைவுகளாய் !


வாழ்க்கைப் பயணம் உள்ளவரை 

   வாழும் நினைவோ  பலகோடி !

சூழும் நினைவில் தத்தளித்துச் 

    சுழன்று தவிக்கும் நம்மனது !

வீழ்த்தும் துன்ப நினைவுகளும் 

   விரும்பும் இன்ப நினைவுகளும் 

ஆழ்த்தும் நம்மைக் கனவுலகில் !

     ஆழ்ந்துப்  பார்த்தால்  மாயுலகம்  !


- தணிகா சமரசம்  


காலமோ மாறி ஓடும்
  கற்பனை, சுவையும் மாறும் !
ஞாலமோ சுமையை வாழ்வில்
  நாளுமே ஏற்றி வைக்கும் !
பாலமாய் நின்று தாங்கும்
  பாசமும் மறைந்து போகும் !
தூலகம் (விடம்) நிறைந்த போதில்
  தூததும் நினைவே அன்றோ !


எண்ணும் பொழுதில் விளையாடும்
  இளையோர் நினைவும் அதிலன்றோ !
வண்ணம் மின்னும் காதலதும்
  வாழ்வில் மாந்தர் நினைவன்றோ !
திண்ணம் முதியோா் கனவெல்லாம்
  தேடும் வம்ச வளமன்றோ !
சுண்ணம் (தூசு) போன்று மறைந்தேகி
  தொடரும் கடிதோர் நாளன்றோ !


அலைபாயும் நினைவுகளோ ஆயிரங்காண் ! ஆங்கே
  அலைக்கழியும் மனமதிலே அடுக்கடுக்காய் முற்றும்
கலையாத கனவுகளும், காணுகின்ற உறவும்,
  கண்டுவிட்ட பிரிவினிலே கனக்கின்ற உணர்வும்
நிலையாக நின்றாடி நிம்மதியைத் தொலைக்கும் !
  நீக்கமற நிறைந்துவிடும் நினைவுக்கே என்றும்
விலையாகக் காலமதை வீணுக்கு இறைத்தே
  விரைகின்ற வாழ்வினிலே வரவொன்றும் இலையே !

திருமதி சிமோன் 


பரி நகரின் பாதாளச் சாய்க்கடைகள்!



நாகரிக முன்னேற்றத்தைக் குறிப்பிட எத்தனையோ அறிகுறிகள்! அவற்றுள் ஒன்று  'சாய்க்கடை வடிவமைப்புஎன்றால் நம்புவீர்களா? உண்மை இது! சிந்து சமவெளியில் அகழ்வாய்வு  மேற்கொண்ட ஆய்வாளர்கள் அசந்து போனார்கள்: ஆழப் புதைந்து கிடந்த இடிபாடுகளுக்கு இடையில் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட நகரத்தின் சிதிலங்கள் சிதறிக் கிடந்தனவாம். மேலும் அந்த நகரின் சாக்கடைகள், பாதாளச் சாய்க்கடைகள் அவ்வளவு  சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தனவாம்! ஆகவே சிறப்பான நாகரிகத்துக்கு  உள்ள அறிகுறிகளில் ஒன்றாகச் சிறப்பான சாய்க்கடை வடிவமைப்பும் இடம் பெற்றது.

இந்த அடிப்படையில் பார்த்தால் இக்கால நாகரிகத்துக்கு எடுத்துகாட்டாகப்  பரி நகரம் விளங்குகிறது. ஆம் பரி நகரத்தின் பாதாளச் சாய்க்கடைச் சிறப்புகளைக்  கேட்டால் அப்படியே சொக்கிப் போவீர்கள். வருகிறீகளா, ஒரு சுற்று அடித்து வருவோம்.
பரி பாதாளச் சாய்க்கடைகளைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமா? கவலையே வேண்டாம்! குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்க்க அனுமதி உண்டு. அதன் நுழை வாயில் அல்மா பாலத்துக்கு அருகில் (Pont d'Alma) உள்ளது. ஆண்டுக்கு 95 000  பேர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள்!

பரி நகரின் பாதாளச் சாய்க்கடை அமைப்புகள் இன்று நேற்று உருவானவை அல்ல! 1370 ஆம் ஆண்டு மொன்மார்த்ர் தெருவின்  (Rue Montmartre) கீழ் அமைக்கப்பட்ட பாதாளச் சாய்க்கடைத்  திட்டம் பலவேறு பிரஞ்சு அரசுகளால் தொடரப்பட்டு நகர் முழுவதும் பரவலாக்கப்பட்டது.
இடைக்காலம் வரை பரி நகரின் குடி நீர்த் தேவையைச செய்ன் நதி நீர் பார்த்துக்கொண்டது.பயன்படுத்தப்பட்டு மாசடைந்த நீரை விளை  நிலங்களிலோ தளம் பாவப் படாத தெருக்களிலோ கொட்டினார்கள்.அதன் பின் அந்த நீர் மறுபடி செய்ன்  நதிக்கே திருப்பிவிடப்பட்டது.ஏறக்குறைய 1200 ஆண்டுகளில் பிலிப் ஒகுஸ்ட் (Philippe Auguste) அரசர் பரி தெருக்களில் கற்களைப் பதித்துத் தளம் பாவினார். அவற்றின் அடியில் மாசடைந்த நீர் பாய்ந்தோடப் பாதாளச் சாய்க்கடை அமைக்கப்பட்டது.1370 -இல் 'Hugues Aubriot' என்பவர் மொன்மர்த்ர்  தெருவின் கீழ் நிலவறை  கல்லால் கட்டினார் ; இதில் சேகரிக்கப்பட்ட அழுக்கு நீர்  'Menilmontant' ஓடைக்குக்கொண்டுபோகப்பட்டது. 14 -ஆம் லூயி மன்னர் காலத்தில் செய்ன்  நதி இடக் கரைப் பக்கம் சாய்க்கடை வட்டத் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது.1855 -இல் 3 -ஆம் நெப்போலியன் , பரி நகரின் சுகாதாரம், போக்குவரத்துகளையும்  மேம்படுத்த  முனைந்தார். விளைவாகப் புத்தம் புதிய பெருஞ்சாலைகள், நீர்வழிப் பாதைகள்,
சாய்க் கடைகள் முளைத்தன.அவரிடம் பணியாற்றிய  ஒஸ்மான் பிரபு (Baron Haussmann), பொறிஞர் யுஜின் பெல்கிரான்  (Eugène Belgrand) இப்போதுள்ள பரி சாய்க்க்கடைகள், நீர் வழங்கு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள். குடி நீர் , குடி நீர் அல்லாத பொதுப் பயனாகும் நீர் என இருவகை நீர் வழங்கவும் 600 மீட்டர்  நீளச் சாய்க்கடைகள் அமைக்கவும் அவர்கள் பெரிதும் உதவினர்.

1914 முதல் 1977 வரை 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட சாய்க்கடைகள்  உருவாக்கப்பட்டன. 1935 முதல் எவ்லின் பகுதியில் உள்ள Achères அழுக்கு நீர் தூய்மை படுத்தும் நிலையம் உருவாக்கப்பட்டது.

பரி நகரில் இருப்பது போன்ற சிறப்பான சாய்க்கடை அமைப்பு  வேறு எந்த நகரத்திலும் இல்லை! 2100 கிலோமீட்டர் நீளமான நிலவறைகள்  ஊடாக (tunnels), சாய்க்கடைகள்  அமைந்துள்ளன ; இவற்றில் ஓடுவது வெறும் அழுக்கு நீர் என்று கருத வேண்டா! ஆம்;, இவற்றின் ஊடாக நன்னீர்க் குழாய்கள், குடி நீர் அல்லாத நீர்க் குழாய்கள், தொலை தொடர்புக்கு உதவும் கம்பிகள், போக்குவரத்துக்கு உதவும்  விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கம்பிகள்...எனப் பலவற்றையும்  இவை தம்முள் அடக்கி உள்ளன! ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்படும் அழுக்கு நீரின் அளவு என்ன தெரியுமா? 1.2 மில்லியன்  க்யுபிக் மீட்டர் !ஒவ்வோர் ஆண்டும் 15 000 க்யுபிக்  மீட்டர் அழுக்குகள் அகற்றப்படுகின்றன! மலைப்பாக  இல்லையா !

பரி நகரச் சாய்க்கடைகளுக்கு என்றே தனி காட்சியகம் உண்டு தெரியுமோ!1800 முதல் கொண்டே சாய்க்கடைச் சுற்றுலா புகழ் பெறத் தொடங்கிவிட்டது. கீழே  சாய்க்கடைகள் ஓட கொஞ்சம் மேலே நடை பாதைகள்  அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுற்றுலா போகலாம்.

இச்சுற்றுலா ஒரு மணி நேரம் நீடிக்கும். வழி நெடுக சாய்க்கடைகள்  வரலாறு விவரிக்கப்படும். அக்கால இக்கால எந்திரங்கள், கருவிகள்...முதலியவற்றைக் காணலாம்.

சுற்றுலா நேரம் : வியாழன், வெள்ளி விடுமுறை

சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை.

கட்டணம்பெரியவர்கள் : 4.40 யூரோக்கள்

சிறப்புக்  கட்டணம் : 3,60 யூரோக்கள் (10 பேர் கொண்ட குழு ; மாணவர்கள், 6 முதல் 16 வயது உள்ளவர்கள், சீருடையில் வரும் படை வீரர்கள், famille nombreus, Paris-famille , améthyste et émeraude... cartes வைத்திருப்பவர்கள்).


குறும்படம் காண இங்கே அழுத்துக : Visitez les égouts de Paris
தகவல் :எழிலன்