பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 décembre 2013

''இறைவனின் ஒளி''

                                                         


ஏழைகளுக்கு ஒளி தரும் மோஸரின் விளக்கு

அல்பிரட் மோஸர் என்னும் பிரஸிலைச் சேர்ந்த ஒரு மெக்கானிக் சூரிய ஒளியில், மின்சாரம் இல்லாமல் எரியும் விளக்கு ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.பாட்டில் லைட்(bottle light) என்று அழைக்கப்படும் இந்த விளக்கு பெரும் சாதனையாகக் கருதப்படுகின்றது.2002இல் பிரஸிலில் மிகப்பெரிய மின்வெட்டு. எந்த வீட்டுக்கும் மின்சாரம்  கிடையாது. தொழிற்சாலைகளுக்கு மாத்திரந்தான் மின்சாரம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
பிரஸிலில், குறிப்பாக ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் வீடுகள் எல்லாம் பகலிலேயே இருளாகத்தான் இருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் அல்லாடிக் கொண்டிருந்தபோதுதான் மோஸரின்  மனதில் இந்த ''பாட்டில் லைட்'' திட்டம் உதித்தது.
இந்த விளக்குக்கான அடிப்படை விஞ்ஞானம், மிகவும் எளிமையான ஒளி முறிவுத் தத்துவத்தை தளமாகக் கொண்டதாகும்.அதாவது  ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை, நீரால் நிரப்பி, அந்த நீர் நிறம் மாறாமல் இருப்பதற்காக அதில் சிறிது பிளீச்சிங் பவுடரைச் சேர்த்து, வீட்டுக் கூரையில் சிறிய துவாரத்தைபோட்டு,  பாட்டிலின்  மேற்பகுதி வெளியே சூரிய ஒளிக்கு படும்படி வைக்கப்படும், கீழ் பகுதி இருளான வீட்டு அறையினுள் துருத்திக்கொண்டிருக்கும்.
ஒளிமுறிவுத்தத்துவத்தின் அடிப்படையில், பிளாஸ்டிக் பாட்டிலின் ஊடாக வரும் சூரிய ஒளிக்கதிர், அதன் உள்ளே உள்ள தண்ணீரில் செல்லும் போது முறிந்து, அதன் வேகத்தை மாற்றி வீட்டினுள்ளே செல்லும், அப்போது உள்ளே மிகவும் பிரகாசமான வெளிச்சம் கிடைக்கும்.
உள்ளே கிடைக்கின்ற இந்த ஒளியைப் பரிசோதித்த மின் பொறியியலாளர் ஒருவர், சூரிய ஒளி எவ்வளவு பலமாக இருக்கின்றது என்பதைப் பொறுத்துத்தான் உள்ளே வெளிச்சம் வரும் என்கின்ற போதிலும், 40 முதல் 60 வாற்று மின்குமிழ்களின் அளவுக்கு வெளிச்சம் கிடைப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த மின்குமிழ் திட்டம் அப்படியே பிரஸிலில் எல்லா இடங்களுக்கும் பரவி விட்டது. ஏழைகளில் வீடுகளில் எல்லாம் இலவசமாக பல்ப் எரிந்தது.
சூரியன் இறவனால் படைக்கப்பட்ட ஒன்று. ஆகவே இது ''இறைவனின் ஒளி'' என்கிறார் மோஸர்.
பத்து லட்சம் வீடுகளில் ஒளி
பல வீடுகளில் இதனால் நிறைய பணத்தை சேமித்து விட்டதாக மக்கள் கூறுகிறார்கள். இதனால் மின்சாரச் செலவு குறைந்ததால், தனது அடுத்த குழந்தைப் பிறப்புக்கான செலவை தன்னால் ஒரு மாதத்திலேயே சம்பாதிக்க முடிந்ததாக ஒருவர் கூறுகிறார்.அடுத்த வருட இறுதிக்குள் பத்து லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு இந்த பாட்டில் லைட் மூலம் வெளிச்சம் கிடைக்குமாம். தனது சுற்று வட்டாரத்தில் உள்ள பல வீடுகளுக்கு மோஸரே இந்த விளக்குகளை பொருத்திக் கொடுத்துள்ளார்.
மோஸரும் அவரது பாட்டில் விளக்கும்
ஒரு தடவை தனது முதலாளி ஒருவர் ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி, அதனை லென்ஸ் போலப் பயன்படுத்தி, அதன் மூலம் சூரிய ஒளியை குவியச் செய்து காய்ந்துபோன் புதர்களை எரிக்கச் செய்திருக்கிறார்.இதுதான் மோஸர் மனதில் இப்படி ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.
பிலிப்பைன்ஸில் கால்வாசி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். மின்சாரம் என்பது அவர்களுக்கு ஒரு பெரும் செலவு. ஆகவே அங்கு இந்த மோஸரின் விளக்குகள் மூலம், இப்போது ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் வீடுகளுக்கு விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.புதிய, புதிய விடயங்களை ஆராய்வது தனது கணவருக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுகிறார் மோர்சரின் மனைவியான கார்மெலிண்டா.மோஸருக்கு நோபல் பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, அவரால் பல லட்சம் மக்கள் வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள் என்று அவரது ஆர்வலர் ஒருவர் கூறுகிறார்.
ஊருக்கே அவர் ஒளி ஏற்றியிருக்கிறார். ஆனால் அவர் இன்னமும் ஏழையாகவே இருக்கிறார்.அதிலும் ஒரு சுகம் இருக்கிறது என்கிறார் மோஸர்.


Aucun commentaire:

Enregistrer un commentaire