பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 décembre 2013

மெய்விளக்கு

                                                       


வேதாந்த தேசிகர் சொல்லும் மெய்விளக்கு’, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செயல் என்றும் பாராட்டப்படும் பக்தி இலக்கியம். அதனை ஏற்றிவைத்த முன்னோடிகளாகிய  மூவரும்முதலாழ்வார்கள்என்று போற்றப்படுகிறார்கள். ஒரு தீபத்தை வைத்து இன்னும் பல தீபங்களை ஏற்றமுடியும். அதுபோல, மெய்விளக்காகிய அந்த நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்ற இரண்டுதீபப் பாடல்கள், மிகப் பிரபலமானவை. முதலில், பொய்கையாழ்வார் பாடியது:



வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன்
சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே
என்று இந்த உலகத்தையே ஒரு பெரிய அகலாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் பெரும் பகுதி நிறைந்துள்ள கடல் நீரையே நெய்யாக நினைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கடலில் தினந்தோறும் உதிக்கின்ற, வெப்பம் மிகுந்த சூரியனையே நெருப்பாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய விளக்கைதான் பொய்கையாழ்வார் ஏற்றிவைக்கிறார்! இங்கே விளக்கு என்பது, ‘சொல் மாலை’, அதாவது இனிய தமிழ்ப் பாடல்கள். சிறந்த, ஒளி நிறைந்த சக்கரத்தினைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடியில் இந்தச் சொல் மாலையைச் சூட்டி வணங்குகிறார் பொய்கையாழ்வார். தன்னுடைய துன்பமாகிய கடல் நீங்குவதற்கு அவன் அருளை வேண்டுகிறார். கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொருமெகாவிளக்கு, பூதத்தாழ்வார் ஏற்றிவைத்தது:




அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா

இன்பு உருகு சிந்தை இடுதிரியா, என்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

என்னுடைய மனத்தில் உள்ள அன்புதான் அகல், இறைவன் மீது நான் வைத்திருக்கும் ஆர்வம்தான் நெய், அவனை எண்ணி உருகும் எனது சிந்தனைகள்தான் திரி, எலும்புகளெல்லாம் உருகும்படி என்னுடைய ஞானத்தைக் குவித்து அந்த விளக்கை ஏற்றிவைக்கிறேன். சிறந்த தமிழினால் அந்த நாராயணனைப் போற்றுகிறேன். தீபத்தின் மீது ஆண்களைவிடப் பெண்களுக்குதான் ஆர்வம் அதிகம். அவர்கள் செய்யும் விளக்கு பூஜையின்போது பாடப்படுகிற ஓர் இனிய தமிழ்ப் பாடல், இதற்கான காரணத்தைச் சொல்கிறது:

விளக்கே, திருவிளக்கே, வேந்தன்
உடன்பிறப்பே,
ஜோதி மணி விளக்கே, ஸ்ரீதேவி
பொன்மணியே,
அந்தி விளக்கே, அலங்கார நாயகியே,
காந்தி விளக்கே, காமாட்சித் தாயாரே,
பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரி
போட்டு
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன்
ஏற்றிவைத்தேன்,
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க,
வைத்தேன் திருவிளக்கு எந்தன்
மாளிகையும்தான் விளங்க

ஆழ்வார்களைப்போல இந்தப் பெண்கள் அன்பையோ, ஆர்வத்தையோ, ஞானத்தையோ, சிந்தனையையோ, உலகத்தையோ, சூரியனையோ விளக்காக ஏற்றவில்லை. நிஜமான பசும்பொன் விளக்கில் பஞ்சுத் திரி போட்டு, உண்மையான எண்ணெய் ஊற்றி அழகாக ஏற்றிவைக்கிறார்கள். அந்த விளக்கையே தெய்வமாகப் போற்றுகிறார்கள். அதன்மூலம், அந்த விளக்கு ஏற்றப்படும் வீடு சிறந்து விளங்குகிறது, அந்தக் குடும்பம் முன்னேறுகிறது, ஊரில் எங்கும் நலன் பெருகுகிறது. வெளியே ஏற்றப்படும் விளக்கு இருக்கட்டும், நமக்குள் சில விளக்குகள் இருக்கின்றன, ஒன்று, இரண்டு அல்ல, முழுசாக ஐந்து விளக்குகள்
தெரியுமா? திருமூலர் தனது திருமந்திரத்தில் விவரிக்கும் அந்த ஐந்து விளக்குகள்:

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு
ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு!

நம் உள்ளம் ஒரு பெரிய கோயில். ஊனாகிய இந்த உடம்பு ஓர் ஆலயம். வள்ளலான கடவுளைப் புகழ்கின்ற இந்த வாய்தான் அந்தக் கோயிலுக்குக் கோபுர வாசல், தெளிவான உண்மையை உணர்ந்தவர்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மா(ஜீவன்)தான் கடவுள் (சிவலிங்கம்). கோயிலுக்குள் இருட்டாக இருக்குமல்லவா? இறைவனை நோக்கிச் செல்லும் வழியில் வெளிச்சம் வேண்டாமா? அதற்காக ஐந்து மணி விளக்குகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. அவை, நம்மை ஏமாற்றக்கூடிய கள்ளத்தனம் நிறைந்த ஐந்து புலன்கள்!

நன்றி :
என்.சொக்கன்  (தினகரன்)

Aucun commentaire:

Enregistrer un commentaire