பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 septembre 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                      

அன்புடையீர்,

வணக்கம். மனித வாழ்வின் பெரும் சொத்தே 'நினைவுகள்' தான் என்று சொல்லலாம். இன்பமோ, துன்பமோ அவற்றை அசை போடுவது எந்நேரமும் மனதுக்குள் நடந்து கொண்டே இருக்கிறது.  நினைவுகள், அனுபவங்களின் அந்தந்த நேரத்து உணர்வுகளை மீண்டும் உணர வாய்ப்பளிப்பதால், அதே சுவையை இடம், காலம் கடந்து பெறுகிறோம்.

கற்பனைகள் இன்பந்தருபவைதான். எனினும் அவைகளை வளர்த்துக் கொள்ளும்போதே இது நடக்காமலும் போகலாம் என்ற ஐயத்திற்கு அங்கு இடமுண்டு. சில வேளைகளில் ஓர் அற்ப சுகத்திற்காக நடக்க முடியாததைக்கூட கற்பனை செய்து மகிழலாம். இதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதும். அந்த நிமிடம் தாண்டி அதற்குப்  பொருளுமில்லை, வேலையுமில்லை.

ஆனால் நினைவுகள் அப்படியல்ல. வாழ்வின் ஓர் உன்னத நிமிடத்தை, வினாடியை, அது உள்ளத்தில் ஏற்படுத்திய சிலிர்ப்பை, மகிழ்வை - அப்படியே தன்னை, தன் சூழ்நிலையை மறந்து மீண்டும் உணர்வில், கருத்தில் கொண்டு வந்து அதில்  மூழ்கடிக்கும் திறன் கொண்டது.

அதை இழப்பது என்பதை நினைத்துப் பார்க்கக் கூட பயமாக இருக்கிறது. எந்த நினைவும் இல்லாத ஒரு வெறுமை தவமாகப் போற்றப்படலாம். முற்றும் துறந்த ஞானிகளுக்கு அது எளிதில் வசப்படலாம். ஆனால் ஒரு சாமானியனுக்குத்  தனிமையில் துணை இருப்பது நினைவுகள்தான்.

அதனால்தான் மூளை வளர்ச்சிக் குறைந்தக் குழந்தைகளைக் காணும்போது மனம் பதைக்கிறது. அவர்கள் எதை, எவ்விதம் உணர்கிறார்கள், எதை நினைவில் நிறுத்துகிறார்கள், எது அவர்களைப் பாதிக்கிறது, எதை வெளியில் சொல்ல முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்  என்று புரிந்து கொள்ள முடியாமல் நமது நாகரிக உலகின் புற வளர்ச்சிகள் எல்லாம் தோற்றுப் போகின்றன.

அதை விடக் கொடுமை நன்கு வாழ்ந்து, பெரும் புகழும் பெற்று, சாதனைகள் பல படைத்து, சமூகத்தில் உயர் மட்டத்தில் நாலு பேரை வாழ வைத்தவர்களும், மூப்பென்ற செல்லரித்து, நினைவு மறந்து  நடைப் பிணமாய் உலவுவது!

விஞ்ஞானம் இக்குறைகளைப் போக்கப் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. மனிதனின் மிக அந்தரங்கமானதும், அத்தியாவசியமானதுமான இந்த மூளையைக்  காக்கும் அறிவியலுக்குத் துணை இருப்பது மனிதக் கடமை என்றே தோன்றுகிறது.

அதைவிட முக்கியம் நமது வட்டத்திற்குள் அவர்கள் இல்லை என்பதற்காக ஒதுக்கி விடாமல் அவர்களை அரவணைத்து, எப்போதும் போல் அன்பும், மதிப்பும் செலுத்துவது!

எப்போது அவர்கள் கவனத்தில்  நம் செயல்கள் பதிகின்றன என்று நாம் அறியாத போதிலும், அவர்களைப் புறக்கணிப்பது மனித நேயத்திற்கு அப்பாற்பட்டது. 

தற்கால உலகம் கல்வி எப்படி நமது அறிவை வளர்ப்பதோடு, மூளையின் செயல்பாட்டையும் காக்க உதவுகிறது என்பதை அறிவுறுத்தி விட்டது. சிந்தனை, வாழ்நாள் முழுதும் கற்பது இவைகள் எல்லாம் ஏதோ அறிவாளிகளுக்கானது என்று ஒதுங்காமல் உடலுக்கும், மனதுக்கும், நினைவுக்கும் வேண்டியவைகளைக் கற்று, கடைப்பிடித்து -  வாழும் வரை எடுத்தப் பிறவியை  பிறருக்குச் சுமையாகாது வாழ்ந்து முடிக்க முயல்வோம்!

  திருமதி சிமோன் 

நுண்ணறிவு

                                                             

நுண்ணறிவு என்பது புரிந்துகொள்ளும் ஆற்றல், சிக்கலைத் தீர்க்கும் ஆற்றல், தொடர்பு காணும் ஆற்றல், சூழ்நிலைப் பொருத்தப்பட, கருத்தியல் சிந்தனைத் திறன் போன்ற ஆற்றல்கள் அல்லது திறன்களின் தொகுப்பாகும்.

நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை எனக் கூறப்படும் ஆல்பிரட் பினே என்பவர் புரிந்து கொள்ளல், புதுமை புனைதல், தொடங்கிய செயலைத் தொடர்ந்து முடித்தல், தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளைத் தானே உணர்தல் போன்ற கூறுகள் நிண்ணறிவினுள் அடங்கியுள்ளன என்றார்.

நுண்ணறிவின் அளவை உளவியல் வல்லுநர்கள் நுண்ணறிவு ஈவு என்னும் ஒர் அளவையினால் குறிப்பிடுகின்றனர்.
*  டெர்மன் என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.
*  ஒருவருடைய மனவயதுடன் அவனது கால வயதினை ஒப்பு நோக்க நுண்ணறிவுத் திறன் அளவைக் குறிப்பிடுவர். மனவயதை கால வயதால் வகுத்து 100 ஆல் பெருக்கினால் கிடைக்கும் எண்ணே நுண்ணறிவு ஈவு எனப்படும்.
*  நுண்ணறிவு ஈவு (IQ) = மனவயது(மாதங்களில்) (MA)
                                          ---------------------------------------------------X 100
                      கால வயது (மாதங்களில் (CA)
*  100 ஆல் பெருக்குவது ஈவு பின்னமாக இல்லாமல் முழு எண்ணாக இருப்பதற்காகத்தான்.
*  மனவயது என்பது சோதிக்கப்படுபவரின் நுண்ணறிவு முதிர்ச்சியைக் குறிக்கும் அளவாகும்.
*  நுண்ணறிவு வளர்ச்சி 16 வயது வரை நீடிக்கும். எனவே நுண்ணறிவு ஈவு கணக்கிடும்போது சோதிக்கப்படுவோர் 16 வயதிற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.

IQ - 120 இருந்தால் ஐஏஎஸ் படிக்கவைக்கலாம்
IQ - 110 இருந்தால் மருத்துவம் படிக்கவைக்கலாம்
IQ - 100 அல்லது அதற்குக் கீழே இருந்தால் ஏதாவது ஒரு பட்டம் படிக்கவைக்கலாம்
IQ - 80 க்கும் கீழே இருந்தால் சும்மா அவர்களைப் படி படி என்று துன்புறுத்துவதைவிட அவர்களின் பிழைப்புக்கான ஏதாவது தொழிலைக் கற்றுக்கொடுக்கலாம் என்று உளவியலாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.


அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களின் குழு, அமெரிக்கா முழுவதும் பரவலாக, மக்களின் நுண்ணறிவுத் திறனை(IQ) சோதித்ததில், தொற்று நோய்கள், IQ திறன்களை பாதிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கின்றனர்.

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை

நமது மூளையின் எடை எவ்வளவாக இருக்கும் என் நினைக்கின்றீர்கள்? உமது உடல் எடையின் 2 வீதந்தான், நமது மூளையின் எடையாகின்றது.
வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.
ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன.
நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளுமாம்.
மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.
வாழ்க்கையில் மூளை, குவாட்ரிலியன்... அதா வது, 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது!
18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது.
நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் என்று விரும்பினால் எந்த உயர் பானங்களையும் தேடி அலைய வேண்டாம், குடிநீர் போதும்.

நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும்.  5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.
அறிவுக்கும் மூளையின் எடைக்கும் சம்பந்தம் இல்லை.
மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம் புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.

இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15-20% நேரடியாக மூளைக்கு செல்கின்றது. 
மனித மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால் அதனுடன் நேரடியாக இணைந்துள்ள நம் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும்.  

மனித மூளையில் 80% தண்ணீரே உள்ளது. நீர் வறட்சி மூளையை பாதிப்புக்குள்ளாக்கலாம். ஆகையால், நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும். தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
 தோப்புக்கரணம் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமாம். இயற்கையிலேயே மன அழுத்தம் உள்ள பிள்ளைகள்( ஆட்டிஸம்), மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் இது மிகவும் பயனுள்ள யோகாசனமாம்.


பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட ஆண்களின் மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம். அதனால்,மூளையின் எடையும் ஒரு 100 கிராம் அதிகம். பெண்களின் மூளையில் செல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,செல்களுக்கிடையே உள்ள இணைப்பு அதிகம். அதாவது, பெண்கள் குறைந்த அளவு செல்களை வைத்துகொண்டு விரைவாக வேலை செய்கிறார்கள்.

மூளையில் லிம்பிக் சிஸ்டம் என்றொரு அமைப்பு இருக்கிறது.இதுதான் நமது பலவித உணர்ச்சிகளைக் கையாள்கிறது. இது,ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். இதன் விளைவாக மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது,உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திகொள்வது,ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் மேலானவர்கள். இதனால்தான் குழந்தைகளைக் கவனிப்பது,வீட்டைப் பராமரிப்பது, போன்ற விசயங்களைப் பெண்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள்.உலகத்தின் எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் இதுதான் நியதி.

மூளையின் இடப்பக்கம் ,கணக்குப் போடுவது, தர்க்க ரீதியான சிந்தனைகள் இதற்கு பொறுப்பு.மூளையின் வலப்பக்கம் மொழியாற்றல், பேச்சுத்திறன் இதற்கு பொறுப்பு. இடப்பக்க மூளையையும் வலப்பக்க மூளையையும் கோர்பஸ் கோலோசம் (corpus colosum) என்ற ஒரு " சாலை : இணைக்கிறது. ஆண்களைவிடப் பெண்களின் மூளையில் இந்த சாலை பெரியது. அதன் காரணமாகப் பெண்களின் மூளையில் தகவல் பரிமாற்றங்கள் மிக வேகமாக நடக்கின்றன. இதனால் பெண்கள், மூளையின் இரண்டு பக்கங்களையும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொழியை கற்றுகொள்வதில் ஆரம்பித்து, உள்ளுளணர்வு என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு திறன் சற்று கூடுதல். 

அந்தக் காலத்தில் மாணவர்களை, கற்பூர புத்தி, கரித்துண்டு, வாழை மட்டை புத்தி என்று பாகுபாடு செய்வார்கள்
கற்பூர புத்தி - இந்த வகை குழந்தைகள் சொன்னவுடனேயே புரிந்துகொள்வார்கள்..
கரித்துண்டு - இரண்டுமுறை சொன்னால் புரிந்துகொள்வார்கள்.
வாழை மட்டை புத்தி - எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.



அல்சைமர் நோய்


                                                          

கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக செப்டம்பர் மாதம் 21-ஆம் நாள் 'உலக அல்சைமர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.இது ஒரு வகையான ஞாபக மறதி நோய்.ஜெர்மன் நாட்டு மனநல மருத்துவரும் நரம்பியல் வல்லுருமான Alois Alzheimer என்பவர்தாம் 1906 -இல் முதல் முறையாக இந்நோயைக்  கண்டறிந்தார். அதுமுதல் இந்நோய் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

 அமெரிக்காவில் சுமார்   55 லட்சத்துக்கு மேல் முதியவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அமெரிக்காவின்   முன்னாள் அதிபர் ரீகன் இந் நோயால் பாதிக்கப்பட்டவர்.இந்திய மக்கள் தொகையில் 6.40 கோடி (5.5 சதவீதம்)  அல்சைமர் நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030 -ஆம் ஆண்டில் 9 கோடியாகவும் (6.4 சதவீதம்), 2050 -ஆம் ஆண்டில் 11.30 கோடியாகவும் (7.2 சதவீதம்) உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  முதியவர்களைப்  பெரும்பாலும் தாக்கும் இந்நோயினால், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இவர்களுக்கென தனி உலகத்தையே உருவாக்கி வருகிறார்கள்.

பொதுவாக ஒருவரின் 60 வயதில்  அல்சைமர் நோய் இனங்காணப்பட்டு வருகிறது. நரம்பு மற்றும் மனநல பரிசோதனைகள் மூலம் இந்நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. இதைக்  குணப்படுத்த முடியாது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை அளித்து நோய் முற்றாமல் பார்த்துக்  கொள்ளலாம்.மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றல் இழப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்குத்  தேவையான வேதிப் பொருள்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல்பிரச்சனை உருவாகிறது.
 இந்த நோயால் பாதிக்கபடுகிறவர்கள்   நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும்  இழந்து போவார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்:
  •  பெயர், வாழ்விடம், வயது,  நேரம், தேதி மற்றும் நாளை  மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக் காலச்  சம்பவங்களே மறக்கும். காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • யோசிப்பதில் திணறுவது எழுத்து மற்றும் எண்களை அடையாளம் காண்பதில் பிரச்சனை, கணக்கிடுதலில் பிரச்சனை போன்றவை.
  • தொடர்பாற்றலில் பிரச்சனை-  தாங்கள் பேசும் மொழியை பயன்படுத்துவதில் பிரச்சனை, சொற்கள் மறந்து போகும்.வார்த்தைகளை கண்டுபிடிக்கத் திணறுவது, ஞாபகம் வைத்துக் கொள்வது, வார்த்தைகளை வெளிப்படுத்துவதில் அல்லது  எழுதுவதில் பிரச்சனை  புதிதாகக்  கற்பதில் பிரச்சனை ஏற்படுவது
  • இயல்பற்ற நிலையில் இருப்பார்கள். கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தினால் சமையல், வாகனம் ஓட்டுவது, வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்ய கஷ்டப்படுவார்கள். இந்த வியாதி முற்றும் போது, தினசரி நடவடிக்கைகளான குளியல், ஆடை அலங்காரம், உண்ணுதல் மற்றும் கழிப்பறை விஷயங்களைக்  கூடத்  துணையில்லாமல் செய்ய முடியாது.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலைச்  சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல், மூர்க்கமாக நடந்து கொள்ளுதல், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் மற்றும் காரணமே இல்லாமல் சந்தேகப்படுதல்,
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களைக்  கடைப்பிடிக்கத்  தவறுதல்
    •  சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.
கல்வி, விடா முயற்சியுள்ள மனநல நடவடிக்கைகள், ஊக்குவிக்கும் மொழி என இவை அனைத்தும் அறிவுத்திறனை அதிகரிக்க உதவும்.மேலும்  இவை மூளையைச்  சுறுசுறுப்பாக வைத்து வயதாகும் மூளையைப் புதுப்பிக்கும் என்று கூறுகிறார்  சிகாகோ ரஷ் பல்கலைகழக மருத்துவ மையத்தைச்  சேர்ந்த மருத்துவர் டேவிட் பென்னெட். அதனால் கற்பதை நிறுத்தாதீர்கள். கற்பதைத்  தொடருங்கள்..  இது அல்சைமரை தடுக்கும் என பரிந்துரைக்க படுகிறது .இதைதான் திருவள்ளுவர்,

"தொட்டனைத்து ஊறும்  மணற்கேணி மாந்தர்க்குக் 
 கற்றனைத்து ஊறும்  அறிவு"

'மணலில் உள்ளக் கிணற்றில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அது போல மக்களுக்குக் கற்றக்  கல்வியின் அளவுக்கு அறிவுஊறும். அதாவது மூளை வேலை செய்யும்' என்கிறார்.


அல்சைமர் நோய் தாக்கப்படும் நான்கில் ஒருவர் இளமைப் பருவத்தில் தலையில் காயம் ஏற்பட்டவராக இருப்பர். அதிலும் நடுத்தர வயதினர், தலையில் காயத்தை ஏற்படுத்தி கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த நோயால் தாக்கப்படலாம்.எனவே தலைக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.

சளி, தொண்டை புண், அல்சர், நுரையீரல் அழற்சி மற்றும் ப்ளூ போன்ற தொற்றுக்கள் அல்சைமரை ஏற்படுத்தும். ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள் மூளைக்குப் பாக்டீரியாவை அனுப்பும். அதனால் பற்களை நன்றாகத் துலக்கி, அவ்வகை தொற்றுக்களில் இருந்து விடுபடுங்கள்.

வைட்டமின் டி சத்தின் குறைபாடு அதீத அளவில் இருக்கும் போது, அறிவுத்திறன் பாதிப்படைய அதிகம்  வாய்ப்பு உள்ளது.  வைட்டமின் டி இயற்கையாகவே உள்ள உணவு, மற்றும் கரித் துகள், க்ரீன் டீ, ரெட் ஒயின் சாப்பிட்டால் இந்நோய் வராமல்  தடுக்க முடியும்.

அமெரிக்காவின் வட கரோலினாவில் இருக்கும் டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நம்மூர் மஞ்சளின் மகிமையை உறுதி  செய்துள்ளார்கள்.மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும்  புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலைத் தடுக்க வல்லது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான நம்மூர்  பேராசிரியர் முரளி துரைசாமி.

அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகள்:

தானிய வகைகள்:குறிப்பாகப் புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ள கோதுமை, பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகியவை.மேலும் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
ப்ளூபெர்ரி,செர்ரி,தக்காளி,ப்ராக்கோலி,தயிர்,சாக்லெட்,மீன், முட்டை, மாட்டுக்கறி, கடல் சிப்பி. கடல் சிப்பியில்  துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும். மனத்தை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.
 தினமும் 3அல்லது 5 கப் காபி பருகினால், அல்சைமர் நோயில் இருந்து 65 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என்று ஐரோப்பாவில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது.
காபி பிடிக்கவில்லையா?   ஆப்பிள் ஜூஸ் பருகுங்கள்.- ஞாபக இரசாயனமான அசிடில்கோலினின் உற்பத்தியை ஆப்பிள் ஜூஸ் அதிகரிக்கச் செய்யும். அதனால் இது அல்சைமரை தடுக்கும் மருந்தாக விளங்குகிறது.
முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயைத் தவிர்க்க முயலுவோம்.

பெரும்பாலும் முதுமையில் தாக்கக்கூடிய டிமென்ஷியா எனப்படும் நினைவிழப்பு நோய் இந்த நூற்றாண்டில் உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரும் மருத்துவ,  சமூக நெருக்கடியாக உருவாகியிருப்பதாக அல்சைமர் (Alzheimer) நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியா சீனா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டினரின் ஆயுட்காலத்தைக் கூட்டி வருவதால் இந்த ஞாபகமறதி நோயும் அது ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரச் சுமையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவ்வுலக அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நோயால் தாக்கப்பட்ட தாயுடன் மகன்படும் அனுபவங்களை  Forget Me Not திரைப்படம்  சித்தரிக்கிறது.. இத்திரைப்படத்தின் உண்மையான ஜெர்மனிய பெயர் VERGISS MEIN NICHT.   முடிந்தால் ஒருமுறை பாருங்கள்.

'a journey of caring' - 'நலம் பேணும்  பயணம்' என்பதே இந்த ஆண்டின்  விருது வாக்கியமாகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட  முதிய தலைமுறையைக்  காக்கத்  தேவையான செயல்களில் நம்மையே ஈடுபடுத்திக்  கொள்வோம்.

லூசியா லெபோ

இளம் சாதனையாளர்கள்

                                                 

குழந்தைப் பருவத்து அறிவுக்கூர்மையை மழுங்க விடாமல் தங்களும் பிரகாசித்து, பிறர்க்கும் பயனளிக்கும் விதத்தில் வாழ்பவர் மிகக் குறைவு! அவர்களுள் ஒரு சிலர் கீழே:

இளம் சாதனையாளர்கள்

  • வில்லியம் மிட் என்பவர் தனது 14-வது வயதில் அரசியல் கலந்த அருமையான நாடகம் எழுதி புகழ் பெற்றார்.
  • விக்டர் ஹியூகோ தனது 15-வது வயதில் பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு சிந்தனைகள் பொதிந்த கவிதைகள் எழுதி அனுப்பினார்.
  • மாவீரன் அலெக்சாண்டர் 16 வயதிலேயே தனது தந்தையின் போர்ப் படையில் தளபதியானார்.
  • விஞ்ஞானி கலிலியோ தனது 17-வது வயதில் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்திலுள்ள விளக்கு இப்படியும், அப்படியும் ஊசலாடுவது ஏன்? என்பது குறித்து ஆராய்ந்தார்.
  • பீதோவன் தனது 21-வது வயதில் இசை உலகில் தன் பெயரை நிலை நாட்டினார்.
மேற்கூறியவர்கள் என்றோ எங்கோ பிறந்து சாதனைப் படைத்தவர்கள் என்றால், நம்மில் நம்மோடு வாழும் இளம் பிஞ்சுகளின் திறமைகள் பின்வருமாறு:

 சென்னையைச் சேர்ந்தவர் ஷ்ராவன் குமரன்(14). அவரது தம்பி சஞ்சய் குமரன்(12). அப்ளிகேஷன்களை உருவாக்கித் தரும் கோ டைமன்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஷ்ராவன். அதே நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய். அவர்கள் இந்த நிறுவனத்தை தங்கள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினர். இந்தியாவின் இளம் தொழில் அதிபர்களாக இந்த சகோதரர்கள் உள்ளனர். சென்னையில் உள்ள வேல்ஸ் பில்லபாங் சர்வதேச பள்ளியில் ஷ்ராவன் 9ம் வகுப்பிலும், சஞ்சய் 7ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். இந்த சகோதரர்களின் தந்தை குமரன் சுரேந்தர் சைமன்டெக் நிறுவனத்தின் ஆன்ட்டி வைரஸ் மற்றும் செக்யூரிட்டி சொலுஷன்ஸ் டைரக்டர். தாய் ஜோதி லக்ஷ்மி முன்னாள் பத்திரிக்கையாளர். புரோகிராமிங் கற்றுக் கொள்ள, கேட்ஜெட்டுகளுடன் விளையாட தங்களை ஊக்கப்பட்டுத்தியதே தங்கள் தந்தை தான் என்கின்றனர் இந்த சுட்டிப் பையன்கள்.

ஷ்ராவனும், சஞ்சயும் சேர்ந்து கேட்ச் மீ காப் என்று திருடன், போலீஸ் விளையாட்டு அப்ளிகேஷனை கடந்த ஆண்டு வெளியிட்டனர். அவர்களின் இந்த முதல் அப்ளிகேஷனே சூப்பர் ஹிட்.

சகோதரர்கள் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 11 அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளனர். அண்மையில் அவர்கள் எக்ஸ்ட்ரீம் இம்பாசிபிள் 5 அல்லது இஐ5 என்ற ஆக்ஷன் விளையாட்டு அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளனர். (நன்றி ஒன் இந்தியா தமிழ் ).


வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
பாளையங்கோட்டையை சேர்ந்த, 11 வயது மாணவி, இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள் உட்பட, ஏழு தேர்வுகளை எழுதி, சாதனை படைத்துள்ளார். படிப்பில் மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைத்தால், ஏதுவாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, சங்கர் காலனி செண்பகம் நகரை சேர்ந்த, கல்யாண குமாரசாமி – சேது ராகமாலிகா தம்பதியின் மகள் விசாலினி, 11. இவர், பாளையங்கோட்டையில் உள்ள, ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஐ.க்யூ., அதிகம்:-
சாதாரண மனிதர்களை விட நுண்ணறிவுத் திறன் (ஐ.க்யூ.,) அதிகம் உள்ளதால், நான்கு வகுப்புகளை, இரண்டு ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்றதன் மூலம், 11 வயதில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு, இரண்டரை வயதாகும் போதே, இவரை பரிசோதித்த டாக்டர், மற்றவர்களை விட நுண்ணறிவுத் திறன் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். சாதாரண மனிதர்களுக்கு நுண்ணறிவுத் திறன் அளவு, 90லிருந்து 110 வரை இருக்கும். விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 வரை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புனேயில் உள்ள நிறுவனம் ஒன்றும், விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 ஆக இருப்பதை, உறுதி செய்துள்ளது.
விசாலியின் இந்த உலக சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு, 14 வயது பூர்தியாகியிருக்க வேண்டும் என்பதாலும், இவருக்கு தற்போது, 11 வயது தான் ஆகிறது என்பதாலும், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கு, இன்னும் மூன்றுஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.