பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 juillet 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                                  

அன்புடையீர்,

வணக்கம். மேலே இருக்கும் படமே எழுத வருவது என்ன என்பதை விளக்கி இருக்கும் . அந்த இருவர் காதலர், அல்லது கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை! நண்பர், உறவினர், ஒன்றாக வேலைச் செய்பவர், ஏன்  வெறுமனே தெரிந்த இரண்டு பேராகக் கூட இருக்கலாம். எது, ஏன் இப்படி அவர்களை முகம் திருப்ப வைக்கிறது என்பதுதான் தற்போதைய வாழ்க்கைப் புதிர். இவர்கள் இப்படி இருப்பது அவர்களையே மனதால்பாதித்து, அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கிறது என்பது இன்றைய காலச் சூழல்!

முன்பும் ஒருவருக்கொருவர் கருத்து பேதம் கொள்வது இல்லாமல் இருந்திருக்க முடியாது. இருந்திருக்கவில்லை! ஆனால் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாத் தன்னடக்கமும் இருந்தது. பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது என்கிற நாகரிகம் இருந்தது. எடுத்தெறிந்து பேசினால் உறவு கெட்டுப் போகும் என்ற விவேகம் இருந்தது. எதிராளி தவறாகவே பேசினாலும் பொறுத்துக் கொள்ளும் பொறுமை இருந்தது. விட்டுக் கொடுக்கும் தன்மை இருந்தது. மன்னிக்கும் பக்குவம் இருந்தது. எல்லாவற்றையும் விட உண்மையாகவே இருந்தாலும் சிலவற்றை வெளியிடக் கூடாது என்ற பண்பும்,  சில உண்மைகள் சுடும்-அவற்றை வெளியிட்டால் எல்லோராலும் அதைத் தாங்க முடியாது என்ற அறிவும் இருந்தது.

ஏதோ இப்போது உள்ளவர்களெல்லாம் சிந்திக்கும் திறனற்றுப் போய் விட்டார்கள் என்று ஒட்டு மொத்தமாகக் குறை சொல்ல வரவில்லை. இன்றைய உலகு    படிப்பாலும், பணத்தாலும், பதவியாலும், புகழாலும் வெற்றிகொள்வதை முன்னிறுத்தி செயல்படுகிறது. அதற்காக அலைவதையே வாழ்க்கையாக்கி இருக்கிறது. இந்த ஓட்டத்தில் நின்று நிதானித்து, தன்னையே எடை போடக் கூட ஒருவருக்கும் நேரமில்லை. தன் குறையே தனக்குத் தெரியாத போது, தன் புற வாழ்வின் வெற்றியையே தானாக எண்ணி, தான் செய்வது தவறாகுமா என்ற மிதப்பில் செயல்படுகிறார்கள். ஒவ்வொருவரின் இந்தப் பொறுப்பற்றத் தன்மையும் சேர்ந்துதான் சிக்கலை உண்டாக்குகின்றன. உறவுகளைக் கெடுக்கின்றன.

இந்தத் தன் முனைப்பு (Ego), செருக்கு, பிறரிடம் நியாயம் இருக்கும் என்ற எண்ணத்தைக் கூட இவர்களிடம் அழித்து விடுகிறது. அந்த நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்க இவர்களுக்கு மனமில்லை. தன்  குறையாகப் பிறர் சுட்டுவதை, அலசும் பொறுமையோ, அது உண்மையானால் ஏற்கும் மனத் திண்மையோ, அதற்காக வருந்தக் கூடிய பெருந்தன்மையோ இல்லாததால்-தனக்கு மாறாக  யார் என்ன சொன்னாலும், செய்தாலும் அதற்கானக் காரணத்தை விட்டுவிட்டு, அவர்களையே எதிரிகளாக எண்ணத் தலைப்பட்டு விடுகிறார்கள். உண்மை வாய்மூடிப் போக, மற்றவர்களால் அமைதியாக விலகத்தான் முடியும். எப்படி இருந்தாலும்  பந்தம் அங்கே அறுந்து போகிறது. பாசம் விலகிப் போகிறது. இதில் பரிதாபம் என்னவென்றால் எதை இழந்தோம் என்று கூட இவர்கள் உணர்வதில்லை. காலம் மாறி உணர நேர்ந்தால், அது மிக மிகத் தாமதமானதாய் இருக்கும்!

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire