பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 27 janvier 2013

ஓவியத்தில் இறைமை



     இறைச்சங்கமம்                             
 இறைவனும் மனிதனும்                                                            கண்ணனும்கோபியரும்  
    (மைக்கலாஞ்சலோ)


இறைவன் மனிதனைப் படைப்பதும், காப்பதும் பெரிதல்ல. ஏனெனில் மாயையில் உழலும் மனிதனுக்கு அது புரியப் போவதில்லை! தன்  மயமாகச் சிந்தித்து, தானே எல்லாமாய் நினைத்து, தன்னிலேயே நிறைவு காணும் அவனுக்கு இறைவனே உண்மையை உணர்த்தினாலன்றி, தான் ஒரு கைப்பாவை என்பது புரிய வழியில்லை. அது புரிந்தபின் தான் தன்னைப்பற்றிய உணர்வை ஒழித்து, தன்னை இயக்கும் சக்தியைப் பற்றி எண்ணி, புரிந்து,அனுபவித்து,ஏற்று,இணைய விரும்பி தன்னையே இழப்பான்! அந்தச் சங்கமத்திற்காகவே, உலக இன்பங்களில் மூழ்கிக் கிடப்பவனுக்கு இறைவன் கை கொடுக்கிறான். நீக்கமற நிறைந்து ஆட்கொள்கிறான்.

அந்த சுகானுபவத்தை வார்த்தைகளை விட ஓவியங்கள் அற்புதமாக வெளிப்படுத்துகின்றன. தந்தையும், தாயுமாகி அணைப்பது மட்டுமல்லாமல் இங்கு வாழும் வரை நீயும் ஆணென்றும், பெண்ணென்றும் பேதம் கண்டு மயங்காதே என்றுணர்த்தும் இறைமையை மனிதனோடு இணைக்க மதங்களும், உண்மையும் போராடுகின்றன.



                                                          
                                                                     சிவன் பார்வதி
                                                                (அர்த்தநாரீஸ்வரர்)


சிவனின் திருவிளையாடல்களும், கண்ணனின் லீலைகளும், ராமனின் ஏகபத்தினி விரதமும், உயிர்களிடத்துக் கொண்ட அன்பும் நாம் இங்கு வாழும் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணங்களே அன்றி வேறென்ன?



                                                          
                                                                       ராமர் சீதை
                                                               மணியம்  செல்வன்  


பூமியில் இருக்கும் வரை, தன்னைப் போலவே பிறரையும் எண்ணும் பக்குவம் வேண்டும், தன்னிடம் உள்ளதை பிறருக்கீயும் மனித நேயம் வேண்டும், தன்னையே இழக்கவும் துணியும் தியாக உள்ளம் வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்க்கை தெள்ளத்தெளிய உணர்த்துகிறது. மனிதர்களுக்காகத் துறக்கும் மனநிலையே பின்னர் கடவுளுக்காக உலகைத் துறக்கும் திடத்தை அளிக்கிறது.



                                                          
                                                      இயேசுவின் கடைசி உணவு


இறைவனைப் பற்றும் மனம் அடுத்து எதையும் எதிர்கொள்ளும் திடத்தைப் பெறுகிறது.புறநோக்கில் இன்பமோ-துன்பமோ, ஏற்றமோ-தாழ்வோ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை முற்றிலும் கையளித்தபின் எல்லாமே சமமாகிறது. ஒரு கன்னி, தாயாகச் சம்மதிக்கும் மன நிலையும் இதையே குறிக்கிறது.



                                                           
                                                                     கன்னித்தாய்


மைக்கலாஞ்சலோ: 1475-1564இல் வாழ்ந்த இத்தாலிக்காரரான இவர் ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர். கடிதம், வரைபடம், நினைவுக் குறிப்புகள் என்று ஏராளமாக எழுதியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டின் சரித்திரத்தில் முதன்மை இடம் பெற்றவர். வாழும் காலத்திலேயே இவர் வாழ்க்கை வரலாறு இரண்டு முறை எழுதப்பட்டது. 23ஆ வது வயதில் இவர் செதுக்கிய 'பியெட்டா' (இறந்த இயேசுவின் உடலை ஏந்தித் துயருடன் விளங்கும் மாதா) சிற்பம் 180 ச.மீ. உள்ள புகழ் பெற்று சாதனை படைத்தது. இன்னும் தாவீது, மோசேஸ் சிலைகளும் இவர் புகழை உலகில் நிலை நிறுத்துகின்றன.Sistine Chepel விதானத்தில் அவர் ஓவியங்கள் வரைய 4 ஆண்டுகள் பிடித்தன.  செயின்ட் பீட்டர் பசிலிக்கா கவிமாடம் (dome) வடிவமைக்கப்பட்டதும் இவரால்தான். ஆனால் அது முடிக்கப்படுமுன் அவர் மரணமடைந்தார்.


லியோனார் தே வைன்சி:இயேசுவின் கடைசி விருந்து, மோனலிசா போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்தவர். 1452-1519 இல் இத்தாலியில்  வாழ்ந்த இவர், ஒரு மேதை. இவருக்கில்லாத திறமை ஒன்றுமில்லை எனலாம். ஓவியர், விஞ்ஞானி, சிற்பி, இசை,கட்டிட, தோட்ட வல்லுநர், கவிஞர், வேதாந்தி, எழுத்தாளர், புதுமை விரும்பி என இவரது சிறப்புகள் ஏராளமானவை. பொறியியல், வேதியல்,உடலியல்,உலோக வேலை, தோல் வேலை,தச்சு வேலை என்று பல துறைகளில் கால்பதித்திருக்கிறார். விமானம்,நீர் மூழ்கிக் கப்பல்,சண்டைத் தளவாடங்கள் பற்றிய முன் சிந்தனைச் சிற்பி. இவ்வளவிருந்தும், லத்தீன், கணிதம் பற்றிய முறையான கல்வியின்மையால், சம கால அறிஞர்களால் புறக்கணிக்கப் பட்டார். இவர் வரைந்த ஓவியங்களில் 17 மட்டுமே தப்பி உள்ளன.



                                                         


மணியம்-செல்வன்: தி.வி.சுப்பிரமணியம் (1924-1968) 'கல்கி' பத்திரிக் கை கிருஷ்ணமூர்த்தி மூலம் உலகுக்கு அறிமுகமானார். கல்கியின் தொடர்களான 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்' அவரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. கல்கி எடுத்த 'பார்த்திபன் கனவு' திரைப்படத்தின் ஆர்ட் டைரெக்டர் அவரே. சில திரைப்படங்களுக்கு உடை வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார். ஒரே மகனான மணியம் செல்வன் (1950-) தந்தையைக் குருவாகக் கொண்டு, அவர் அடியொற்றியே அவர் பாணியிலேயே புகழ் பெற்றுள்ளார்.ஆனந்த விகடன் இதழில் வைரமுத்து எழுதிய'கருவாச்சி காவியத்திற்காக' இவர் தீட்டிய ஓவியங்கள், இவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்று தந்தன.


Aucun commentaire:

Enregistrer un commentaire