பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 26 juin 2012

கொடுமைச் சிகரங்கள்

                                                                       

செர்மனியின் அடோல்ப் ஹிட்லர்:

ஹிட்லர் பிறப்பால் ஆஸ்ட்ரியன். ஆனால் ஜேர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார்.வியன்னாவில் புராதான யூதர்கள் வாழ்ந்தனர். சிறு வயதிலிருந்தே இவர் இந்த இனத்தவருக்கு எதிராகவே இருந்தார் என அவரது நண்பர் அகஸ்த் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . 1939 ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கற்றிய ஆண்டு.   ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் பொது சமூகத்திலிரிந்து பிரிக்கப்பட்டு தடுப்பு  முகாம்களில் அடைக்கப்பட்டனர். இங்கே என்ன நடக்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும் கண்மூடித்தனமானப் படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின. 54 லட்சம் யூதர்கள் ஐந்து வருடங்களில் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஹிட்லரின் ஆட்சி காலத்தில் கணக்கற்ற ரஷியர்களும் அரசுக்கு எதிரிகள் என்று கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை  வெறும் ஆத்திர உணர்ச்சியால் மட்டும் செய்யப்பட்டவை அன்று. மரண முகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று திட்டமிட்டு அமைக்கப்பட்டன.கொலை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அவர்களின் திருமண மோதிரங்கள், தங்க பற்கள் கொள்ளையிடப்பட்டன.
உலக வரலாற்றில் ஹிட்லரைப் போல் தமது சொந்தத் தலைமுறையினர் மீது  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. நாடு பிடிக்கும் இவருடைய பேராசையால் உலகம் ஒரு கோரமான பெரும் போரை சந்தித்தது. பல கோடி மக்கள் வீடிழந்தார்கள் . அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து போயிற்று.
ஐரோப்பிய நாடுகள் இவரின் மின்னல் வேகத் தாக்குதலால் செயலிழந்தன.
தான் எடுத்த தவறான முடிவுகளால் இவரது முடிவு தற்கொலையானது.  


                                                               


இத்தாலிய பெனிட்டோ முசோலினி:


உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடி இருப்பவர் முசோலினி. இவர் 1922 - 1943 காலப்பகுதியில் இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.  இட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின்பொழுது நேச நாடுகளுக்கு  எதிராகப் போரிட்டுத் தோற்றார். முசோலினியின் கருஞ்சட்டை படை இத்தாலியின் தலைநகரை கைப்பற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. எதிர் கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கினார், தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அதுமட்டுமல்ல தன் எதிரிகளைச் சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேலாகும்.
ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்னால் முசோலினி, புரட்சிக்காரர்களால் நடுரோட்டில் சுட்டு கொல்லப்பட்டார்.இது நடந்தது 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி. இவரை புதைப்பதற்கு முன், குற்ற இயல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து, இவருடைய மண்டை ஓட்டைப் பிளந்து,மூளையை எடுத்துச் சென்று விட்டார்கள் ஆராய்ச்சி செய்வதற்காக.



                                                                  


உகாண்டா அதிபர் இடி அமின்: ஆப்பிரிக்காவை இவர் ஆண்டபோது 'கொடுமைக்கு மறு பெயர் - பைத்தியக்காரச் செயல்களுக்கு இடி அமின்' எனப் பெயரெடுத்தார்.
உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 - 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் ஆட்சியில் இருந்தபோது அரங்கேறிய அரசியல் அராஜகங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அளவே கிடையாது. இவரால் கொல்லப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்தியர்கள் நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அடியோடு ஒரு சில கிராமங்கள் அழிக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் நைல் நதியில் வீசப்பட்டன. பின்னர் அவைகளை அடைப்பு ஏற்படாமல் வெளியே எடுத்துப்போட வேலையாட்கள் நியமிக்கப்பட்டனர். உகண்டா நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார். இதில் கிறிஸ்துவ மத ஆர்ச்பிஷப் உட்பட பல்லாயிரம் பேர் படு கொலை செய்யப்பட்டனர். 1972இல் 'கடாபி' உதவியுடன் இஸ்ரேலியரை துரத்தினார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான நிலையை 'உகாண்டா' எடுத்து, இஸ்லாமிய நாடுகள் சார்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. லஞ்சமும் ஊழலும் பெருகின. பொருளாதாரம் உருக்குலைந்தது.வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடின.  
எழுதப் படிக்ககூடத் தெரியாத இடி ஆமின் தனக்குத்தானே பல பட்டங்களை வழங்கிக் கொண்டார். ராணுவத்தின் பதக்கங்கள் அத்தனையும் தன் சட்டையில் குத்திக்கொள்வார்.
தன்சானியா ராணுவத்தால் உகண்டாவில் இருந்து துரத்தப்பட்ட இவர் லிபியாவுக்கு 1979 ஆம் ஆண்டு தப்பி சென்றார். அங்கிருந்து துரத்தப்பட்டு சவூதி அரேபியாவில் சரணடைந்து 2003 ஆம் ஆண்டு இறந்தார்.



                                                                 

ஈராக் அதிபர் சதாம் உசேன் :
-தன்கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவரை உடனே கொல்வது இவர் வழக்கம்.

1982 இல் சதாம் சியா முஸ்லிம்களின் புனித நகர் ஒன்றிற்கு சென்றுவிட்டு வரும் வழியில் 'துயைல்"  என்ற இடத்தில் சியா முஸ்லிம்களின் கொலை முயற்சிக்கு இலக்கானார். எனவே இப்பகுதி ஈராக்கிய படைகளின் கோரதாண்டவத்திற்கு உள்ளானது. அந்த கிராமத்தின் மக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 148 பேர் வீடு திரும்பவே இல்லை. இவர்களை கொலை செய்ததற்கு சதாம் உசேனே காரணம் என்ற குற்றத்திர்க்காகத்தான் இவர் தூக்கிலிடப்பட்டார்.ஆனால் இச்சம்பவத்தை மிஞ்சுகின்ற படி சதாமின் படைகள் பல கொலைகளை  நிகழ்த்தியுள்ளன 
16 03 1988 அன்று உலகை அதிர வைத்த அந்த சம்பவம் நடந்தது. வட ஈராக்கில் குர்திஸ் இன மக்கள் வாழும் ஹலப்ஜா நகரத்தின் மீது  ஈராக்கிய யுத்த விமானங்கள்  நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொண்டன. குழந்தைகள் பெண்கள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கருகி இறந்து போனார்கள். 10.000 க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி அங்கவீனர்கள் ஆனார்கள். இவர்களிலும் சிலர் நச்சுவாயுவின் தாக்கத்தால் பின்பு மெது மெதுவாக சித்திரவதைப்பட்டு இறந்தார்கள். சதாம் உசேன் செய்த குற்றங்களில் மனித குலத்திற்கு எதிரான மிகக் கொடிய குற்றமாக ஹலப்ஜா மீதான நச்சுவாயுத் தாக்குதல் அமைந்தது. மக்கள்  சதாமுக்கு எதிராக திரும்பினார்கள் .புரட்சி வெடித்தது. கலவரங்கள் அரங்கேறின.

13 12 2003 அன்று திக்ரித்துக்கு வெளியை உள்ள பாதாள  அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு  05 11 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. சதாமின் மேன்முறையீடு  நிராகரிக்கப்பட்டு 30 12 2006 அன்று தூக்கிலிடப்பட்டார்.    




                                                         

லிபியா அதிபர் முஹம்மத் கடாபி: 
 1969 ஆம் ஆண்டு அப்போதைய லிபிய மன்னர் இத்ரிசை பதவி இறக்கியப்பின் ஆட்சியைப் பிடித்தப்போது கடாபிக்கு வயது 27. லிபியர்களை கடாபி தனது ஆட்சிக்காலத்தில் செல்வந்தர்களாக மாற்றினார். அதிக பொருளாதார சலுகைகளை வழங்கினார். அப்படி இருந்தும் மக்கள் அவருக்கு எதிராக புரட்சி செய்ய காரணம் - கடாபிதான் எல்லாமே என்கிற 42 ஆண்டுகளுக்கும் மேலான சர்வாதிகாரம். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும் ஆத்திரமுமே புரட்சியாக வெடித்தது. மனித உணர்வுகளை மதிக்காது , அவர்கள் நலனை புறக்கணித்து தான் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார் . மாற்று கருத்துக்கள் உடையவர்களை சிறையில் அடைத்தார். தீவிரமாக செயல்பட்டோரை கொன்று குவித்தார்.20 10 2011 அன்று கழிவு நீர் குழாயில் பதுங்கியிருந்த கடாபியை புரட்சி படை பிடித்தது . மார்பில், முகத்தில், உடலில் காயத்தோடு இருந்தவரை புரட்சி படையினர் அடித்தே கொன்றார்கள். லிபிய இடைக்கால நிர்வாகமும் அவர்களின் ஆதரவாளர்களும் கடாபியின் மரணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.  




                                                                          

பாகிஸ்தான் அதிபர் ஜெனெரல் பர்வேஸ் முஷாரப் :  நாட்டின் அரசியல் சாசனத்தையே ரத்து செய்த சர்வாதிகாரி.
-நீதி மன்றங்களின் அதிகாரங்களைப் பறித்துக்கொண்டார்.
-அதிருப்தியாளர்களை சிறையிலடைத்தார்.
-தன ஆட்சி நீடிப்பதை எதிர்க்கும் மனுக்களை ரத்து செய்ய சட்டமே இயற்றிக் கொண்டார்.


                                                            

 இலங்கை அதிபர் ராஜபக்சே :

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டதுடன் மொழி அந்தஸ்தும் மறுக்கப்பட்டுள்ளது. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட உரிமை போராட்டம் இவர்களுடையது எனலாம். இலங்கையின் தமிழ் ஈழ பகுதியில் தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு    2008, 2009 இல் நடத்திய இறுதிப் போரின் நாயகன்தான் மகிந்தா ராஜபக்சே. இவர் கொடூரமான ராணுவ தாக்குதலை தமிழர்கள் மீது நடத்தினார்.இரண்டாம் உலக போருக்கு பிறகு நடந்துள்ள மிக கொடூரமான இன அழிப்பு ப் படுகொலை இதுவாகும் .  
பொது மக்களை, பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவு திரளச் செய்து கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியும் அளித்து பாதுகாப்பு வளையத்தில் திரண்ட மக்கள் மீது தொடர் குண்டு வீச்சுகளை ராணுவம் மேற்கொண்டது. முள்ளிவாய்க்காலில் கடல், வான், தரை ஆகிய மூன்று வழிகளிலும் ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் நெருக்கப்பட்டனர்.
அரசு திட்டமிட்டே மருத்துவமனைகளை குண்டு வீசி தகர்த்தது. போர் நடந்த பகுதியில் இருந்த மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் குறிப்பாக அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் போன்ற மனித நேய அடிப்படையிலான உதவிகளை மறுத்ததன் மூலம் அவர்களின் துன்பத்தைக் கூட்டியது. போர்ப் பகுதியிலிருந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்லியதன் மூலம் போதுமான அளவிற்கு உதவிகள் கிடைப்பதைத் தடுத்தது இலங்கை அரசு. ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம், தனது சொந்த உளவுத்துறை,  விளைவுகளை விளக்கியதை மீறியும் ராணுவம் வெறித்தனமான குண்டு வீச்சை நிறுத்தவில்லை. போரின் இறுதிக் கட்டங்களில் பெருமளவிலான மக்கள் இறந்தது குண்டு வீச்சினால்தான்.பிணக்குவியலாய் முள்ளிவாய்க்காலின் கரை மாறியது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சொற்களில் 'இறுதி நாட்கள் கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை ஏற்படுத்தின".
தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்க இவர் எடுத்த நடவடிக்கைகளை பழைய அதிபர் ஸ்ரீமதி பண்டார நாயகா உட்பட பலர் கண்டித்தும் வரைமுறை இல்லா வன்முறையால் வெற்றி கண்டார்.
போரில் தப்பி பிழைத்தவர்கள் தம் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல முகாம்களில் அடைக்கப்பட்டனர். போர் கைதிகளையேதுன்புறுத்தக் கூடாது  என்ற சட்டம் இருக்கும் பொது, அகதிகளாக உள்ள இந்த மக்கள் சுகாதாரமற்ற சூழல், போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி சித்திரவதைப் படுகின்றனர். இவர்களுக்கான மறு சீரமைப்பு முயற்சிகள் மிகவும் தாமதமாக நடப்பது வருத்தமளிக்கிறது.
உலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்பட்டதையும் போர்க் குற்றங்கள் நடைபெற்றதையும் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உலகிலுள்ள மனித நேயமுள்ள அனைவரின் வேண்டுகோளாகும். 

                                                         

Aucun commentaire:

Enregistrer un commentaire