பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 avril 2012

மருத்துவமும் வருமுன் காத்தலும்



உடல் நலம் குறைந்ததும் மருத்துவரை நாடுகிறோம். அவர் மீது கொண்ட நம்பிக்கையால், இன்னும் சொல்லப் போனால் அவர் மருத்துவக் கல்வி மீது கொண்ட நம்பிக்கையால் அவர் கூறுவதை இம்மி அளவும் குறையாது நிறைவேற்றுகிறோம். ஆனால் சில வேளைகளில் அவரும் மனிதர்தான், அவரும் தவறக் கூடும் என்பது நிரூபணமாகிவிடுகிறது. அதற்காக அதற்கெனப் படித்தவர்களை அணுகாமலும் இருக்க முடியாது. மாறாக உடலின் செயல்பாட்டை அறிந்தால், அதன் தொடர் இயக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காரணிகளை அறிந்து களைந்தால் நோயையும் தள்ளிப் போட இயலும் - மேற்சொன்ன சூழ் நிலைகளில் கவனமாகவும் இருக்க முடியும்.

1. மூளை ஒரு நாளைக்கு பத்து லட்சம் தடவை சிந்தனைகளை முறைப்படுத்துகிறது. இதற்கு நூறு பில்லியன் நரம்பணுக்கள் உதவுகின்றன. இவற்றின் உழைப்பு பாதிக்கப்படும்போது அதன் விளைவு நோயாக உடலில் வெளிப்படுகிறது. சாதாரணமாக நரம்பணுக்கள் உணவில் கிடைக்கும் விட்டமின்களைப் பொறுத்தே வேலை செய்கின்றன. இது வரை வந்த மாத்திரைகள் அனைத்தும் மூளையின் நரம்பணுக்களை வலுப்படுத்தவே உபயோகிக்கப்படுகின்றன. எனவே முறையான உணவு மூலம் நரம்பணுக்களைச் சரிவர பராமரித்தாலே வியாதிகளினின்றும் விடுபடலாம்.

சில எளிய வழிகள்:

     ௧. மாவுச் சத்து, வைட்டமின்கள்,அமினோ அமிலங்கள், தாது உப்புகள் கொண்ட எல்லாக் கீரைகளும், பழங்களும் நல்லது.
     ௨. இனிப்பு அசிடிச்சொளைன் என்ற பொருளை மூளையில் உற்பத்தி செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். முடிந்தவரை இயற்கை இனிப்புகளை உண்பது வேறு பல சிக்கல்களைத் தடுக்கும்.
         ௩. வாரத்தில் 150 மணி நேர உடற்பயிற்சி மூளைக்குத் தேவை.
     ௪. புதிது புதிதாகக் கற்பது மூளையை சுறுசுறுப்பாக்கும். இசை கேட்பதைவிட இசைக் கருவிகள் வாசிப்பது பயனுள்ளது.
        ௫. தூக்கமின்மை நினைவாற்றலைப் பாதிக்கிறது. இதனால் அவரவருக்குத் தக்கபடி போதுமான தூக்கம் அவசியம்.

மது, புகையைத் தவிர்த்து, அதிக மாமிசத்திற்குப் பதில் மீன் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் கரு, ஐஸ் க்ரீம் அதிகம் உண்ணாமை, தாவர எண்ணெய், தானியங்கள், கொட்டை வகைகள் போன்ற கொழுப்பு குறைந்த உணவுகள்  உடலில் தீயக் கொழுப்புச் சேரவிடாமல் காக்கும்.

2 . சோர்வு, தலை வலி ரத்தச் சோகையின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது சத்துக் குறைவால் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், முக்கியப் பற்றாக்குறை இரும்புச் சத்துதான். முருங்கை, பீட்ரூட், நூல்கோல்,கீரை வகைகள் பலனளிக்கும்.உரிய நேரத்தில் கவனியாவிடில்,தைராய்டு, புற்றுநோய் உண்டாகலாம்.

3 . அல்சர் எனப்படும் குடல் அழற்சி, அல்லது குடற்புண் ஓயாது பரபரப்பு அடைதல், மனக் கவலை கொள்ளல், அதிக கார, மசாலா உண்ணல் மூலம் ஏற்படலாம். ஹெலிக்கோ பாட்டர் பைலோரி எனும் நுண்கிருமி நீர் அல்லது உணவு மூலம் வயிற்றில் தங்குவதாலும் உண்டாகலாம். இரைப்பையில் சுரக்கும் சீரண அமிலம் அதிகமாகி, சிறு குடலை அடையும் போதுஅங்கே அல்சர்வரும். புகை பிடிப்பது, தலை வலி, மூட்டுவலி மாத்திரைகளை நாட்கணக்கில் சாப்பிடுவதும் அல்சரை வரவழைக்கலாம். மாத்திரைகளை அளவு (dose) மீறி எடுத்துக் கொள்ளும்போது, அது வயிற்றை அடைந்த மாத்திரத்தில் அந்த இடத்தை புண்ணாக்கிவிடலாம்.


சாப்பிடும் நேரத்தில் வயிற்று வலி வருவது அல்சரின் அறிகுறி. நாட்பட்ட அல்சர் இரைப்பை-குடல் சேருமிடத்தில் அடைப்பை ஏற்படுத்தி, சாப்பிட்டது வாந்தியாக வெளி வந்து விடும். அல்சர் உள்ள இடத்தில் ரத்தக்குழாய் வெடித்து ரத்தக் கசிவும் ஏற்படலாம். 5 % பேருக்கு புற்று நோய் வரலாம்.

வாய்ப் புண் கிருமித் தொற்றால் ஏற்படவில்லை என்றால் அது குடல் புண்ணின் அறிகுறியாக இருக்கும். எனவே மிதமான உணவுப் பழக்கமும், அமைதியான மனநிலையும் அவசியம். வாய்ப்புண் வந்ததுமே தயிர், பழங்கள், தண்ணிச் சாறு (பருப்பு+கீரை+தேங்காய்+தக்காளி+நெய் கலந்தது) சாப்பிட சுகம் தெரியும்.

வாய்ப்புண்ணும் சரி, சாதாரணசலதோஷமும் சரி ஐந்து நாட்கள் இருக்கும். அதற்கு மேற்பட்டால்தான் அது ஏதோ வேறு ஒரு கோளாறின் வெளிப்படை என்று அர்த்தம்.

4 . உள் ஆடைகள் சுத்தமின்றி இருந்தால் அங்கே வியர்வை தங்கி அல்லது வீரியமான சோப்புக்களால் நன்றாக அலசப்படாதத் துணிகளால் எக்சமா,காளான் தொற்று, சொரியாசிஸ், வேனில் கட்டி போன்றவை ஏற்படும். ஈரம் காயாத உள்ளாடைகள் அணிவதும் தவறு. சிறு நீரகப் பாதிப்புள்ளவர், சர்க்கரை வியாதி உள்ளவர் இதில் வெகு கவனமாக இருக்க வேண்டும்.

5. தலைச் சுற்றல் - அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், க்ளுகோஸ் சரி அளவு இல்லாதது,புகை, மதுப் பழக்கம், எய்ட்ஸ், தைராய்டு, மஞ்சள் காமாலை, வைரஸ், வைட்டமின் 'பி' குறைவு, ஹோர்மோன் குறைபாடு இவை சிறு நரம்புகளைப் பாதிக்க, ஏற்படலாம். காதில் நீர் கோர்த்தல், அழுக்கு சேரல் கூட தலையைச் சுற்ற வைக்கும். மிக்றேன் என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவலி பிடிவாதக்காரர், ஓய்வில்லாதவர், நேரத்திற்கு உணவருந்தாதவர், கருத்தடை மாத்திரை உட்கொள்பவருக்குஅதிகமாக வரும். மன இறுக்கம் இன்றி, வாழ்க்கையை இலகுவாக எதிர் கொள்வது, கலகலப்பாக இருப்பதே பாதி குணம் தரும்.


6 . மூக்கின் சுவாசப்பாதையில் 'ஆல் பாக்டரிஎபிதீலியம் ' என ஒரு பகுதி.காற்று அதன் நுண்ணிய நரம்புகளில் படும்போது மணத்தை உணருகிறோம்.மூக்குப் பொடி போடுவதால், அல்லது சிமென்ட் கலந்த காற்றையே தொடர்ந்து சுவாசித்தால் பாதிப்பு ஏற்படும்.சதை வளர்ந்து அல்லது கட்டி வந்தும் பாதிக்கப்படலாம்.


7 . காதில் சுரக்கும் மெழுகு போன்ற திரவம் செவித்திறனுக்கு முக்கியம். காதைத் துடைக்க, அத்திரவத்தைத் துடைத்து எடுப்பது கூடாது. நீண்ட நேர தொலை பேசியும், இயர்போன் பாடல்களும் காதுகளுக்குத் தரப்படும் தண்டனையே ! மூக்கிலும் காதுக்குத் தொடர்புடைய நரம்பு ஒன்று உள்ளது. விரல் விட்டு அதை பழுது படுத்திவிட்டால், காது வேலை செய்யது.


8 .இருமலுக்குக் காரணம், தொண்டையில் தூசு படல், உடலுக்கு ஒவ்வாத பொருள், ஆக்சிஜன் தேவைப்படல் ஆக இருக்கலாம்.வயிற்றில் அதிக அமிலம் சுரந்து தொண்டைக்கு வருவதும் ஒரு காரணம். வாயால் சுவாசியாது இருப்பது பெரும்பாலும் நல்லது.


9 . இன்காண்டிநேன்ஸ் என்பது தும்மினால், இருமினால் சிறுநீர் வெளிப்படல். சாதாரணமாக பிரசவம் ஆன பெண்களுக்கு ஏற்படலாம். (சர்க்கரை வியாதி இருந்தால் அடிக்கடி நீர் பிரியும்.) வளர விட்டால் வாழ்நாள் பூராவும் மாத்திரை சாப்பிடவேண்டி இருக்கும். உயிர்கொல்லி அல்ல.ஸ்ட்ரெஸ் காரணமாகலாம். நரம்புத் தளர்வும், மூளைக்கும் சிறு நீரகத்திற்கும் தொடர்பின்மையும் கூடக் காரணம். பொதுவாக அதிக பட்சம் மூன்று மணி நேரத்திற்குள் சிறு நீர் கழித்து விட வேண்டும். அதிகம் அடக்கினால், பிறகு தசைகள் இறுகி, அந்த உணர்வு ஏற்படாது. அதே நேரம் சிறு நீர் உடலிலேயே நீண்ட பொழுது தங்கி இருப்பது நல்லதல்ல.


இறுதியாக உடல் நலத்துக்கு முக்கியமான ஓர் அறிவுரை: தனிமையில் இருப்பவர்களுக்கும், தானுண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருப்போருக்கும் அடிக்கடி சலதோஷம் பிடிக்கும். பிறரோடு கலந்து, மனம் விட்டுப் பழகி, உதவும் மனநிலை உள்ளவர்களுக்கு இருக்கும் மன நிம்மதியும், பொறுப்புணர்ச்சியும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !



திருமதி சிமோன்



Aucun commentaire:

Enregistrer un commentaire