பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 11 septembre 2011

இன்றைய அறிமுகம் - திரு.வி.க.

தமிழ்த் தென்றல் திரு.வி.க.
(26 .08 .1883  -  17 .09 .1953 )

வணிகக் கணக்காளர்,தலைமைத் தமிழ்ஆசிரியர்,
இதழாசிரியர், எழுத்தாளர், தேசத்தொண்டர், கவிஞர்,
பேச்சாளர்,தொழிற்சங்கத் தலைவர், சமூக சீர்திருத்த 
வாதி,சமரச சன்மார்க்கவாதி,இயற்கை உபாசகர்,
பெண்கள் முன்னேற்றத்திற்காக முன்னின்றவர் என
பன்முகக் கலைஞர் திரு.வி.க.

சென்னையை அடுத்த 'துள்ளம்' என்னும் சிற்றூரில்
'விருத்தாச்சலம்'-'சின்னம்மாள்' தம்பதிக்குப் பிறந்த
'கல்யாணசுந்தரம்', முன்னோர்களின் ஊரான 'திருவாரூர்'
இணைந்து, "திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாண
சுந்தரம்" (திரு.வி.க.) என்று அழைக்கப்பட்டார்.

ஆங்கில 'ஸ்பென்சர்' நிறுவனத்தில் பணி புரிந்தபோது
தன ஓய்வு நேரங்களைப் படிக்கவும்,எழுதவும் பயன்-
படுத்திக்கொண்டார். 'விபின் சந்திரபாலர்' சொற்பொழிவு
மூலம் விடுதலை இயக்கத்தில் ஆர்வம் பிறந்து,அரவிந்தரின்
'வந்தே மாதரம்' இதழ்ச் செய்திகளை தன்னுடன் பணியாற்று
பவர்களுக்கு விளக்கி வந்தார். நிர்வாகம் எச்சரித்ததால்
பணியைத் துறந்து வெளியேறினார்!

தன் அண்ணனுடன் சேர்ந்து தொடங்கிய அச்சுக்கூடத்தில்
"திருமந்திரம்"பதிப்பிக்கப்பட்டது. அவருடைய சிறப்புக்
குறிப்புரைகளுடன் "பெரிய புராணம்"வெளியிடப்பட்டது.
பின்னர் பொருள் இழப்பால் அச்சுக்கூடம் மூடப்பட்டது.

பிறகு தான் படித்த 'வெஸ்லியன்' பள்ளியில் பணிபுரிந்தார்.
தலைமை ஆசிரியர் 'ஜான் ரத்தினம்' தொழிற்பயிற்சிப்
நிலையம் ஒன்றைத் தொடங்கி அதில் திரு.வி.க.வை
வணிகக் கணக்கியல் கற்பிக்க பகுதி நேர ஆசிரிய
ராக்கினார். அவர் மூலம் திரு.வி.க. கிறித்துவ மதக்
கோட்பாடுகளைக் கேட்டறிந்தார். பள்ளியின் தலைமை
தமிழாசிரியராக உயர்வு பெற்ற திரு.வி.க. தமிழ்ச்
சங்கம் ஒன்றை நிறுவினார்.

1912 - 'கமலாம்பிகை' என்ற அம்மையாரை மணந்து இரு
குழந்தைகளுக்கு தந்தை ஆகியும், ஒருவர் பின் ஒருவராக
எல்லோரையும் இழந்தார். தம் மனைவி நினைவாக 
 'பெண்ணின்பெருமை'யை உலகோர் அறியப் பாடுபடுவது
என உறுதி பூண்டார்.

அப்போது திலகரும், அன்னிபெசென்ட் அம்மையாரும்
ஒன்றுபட்டு நடத்தி வந்த 'தன்னாட்சிக் கிளர்ச்சி அறப்போர்'
அவரை ஈர்த்தது. 'நியூ இந்தியா' நாளிதழ்த் துணையாசிரியர்
சுப்பராயகாமத்தின் முயற்சியால் தொடங்கப்பட்ட 'தேச
பக்தன்' நாளிதழின் ஆசிரியராக திருவிக பொறுப்பேற்றார்.
தமிழ் இதழியல் துறையில் தெளிவான உரைநடை வழக்குப்
பிறந்தது. தேச பக்தியைத் தூண்டும் வகையில் பணியாற்றியவர், இதழின் உரிமையாளர் மாறியதும், பொறுப்பைத் துறந்தார்.

1920 இல் வ.வே.சு. ஐயரின் அச்சுக்கூடத்தை வாங்கி 'நவசக்தி' வார இதழ் வெளியிட்டார். பின்னர் 1923 இல் அது மாதம் மும்முறைப் பதிப்பாக வெளி வந்தது.கல்கி துணை ஆசிரியராக இருந்தார். 1939 இல் அறிவிக்கப்பட்ட அவசரச் சட்டங்களால் நவசக்தி முடங்க, சமரச சன்மார்க்கத் தொண்டிலும்,
அரசியலிலும் திருவிக ஈடுபட்டார். காந்தியடிகள், திலகர்,வ.உ.சி., ஈ.வே.ரா,இராஜாஜி, பாரதியார்  ஆகியோரின்  நண்பராய் இருந்திருக்கிறார். காந்தியின் ஆங்கில உரைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
காங்கிரெஸ் கூட்டங்களுக்குத் தலைமை வகித்திருக்கிறார்.
அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.

வாழ்க்கை வரலாறு, உரைநூல்கள், அரசியல்,சமய நூல்கள், சமயப் பாடல்கள் என 56  நூல்களைப் படைத்துள்ளார். "சாதி,சமயம், நிறம், மொழி, நாடு முதலிய வேறுபாடுகளைக் கடந்தவன்; பொது மக்களின் சுகவாழ்வு மட்டுமே என் குறிக்கோள் "   என்று வாழ்ந்த திரு.வி.க. சென்ற நூற்றாண்டில்
தமிழ் வளர உழைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

திரு வே. தேவராசு