பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 novembre 2010

குழந்தை இலக்கியம் - சிறுவர் இலக்கியம்:

பல வகை இலக்கியங்களுள் குழந்தை இலக்கியம் பழைமையான ஓர் இலக்கியமாகக் காணப்படுகின்றது.
ஒரு மரம், செடியாக இருக்கும்போது, தினமும் நீர் ஊற்றி, மண்ணை கிளறிவிட்டு, உரம் இட்டு  ஆடுமாடுகள் கடித்துவிடாதவாறு வேலியிட்டு பாதுகாத்து அக்கறையுடன் வளுர்க்கிறோம். இவை எல்லாம் இல்லாவிட்டால் அந்த செடி ஓரளவு மரமாக வளரலாம். ஆனால் நல்ல பயன்தரும் மரமாக அது திகழ்வதில்லை.
குழந்தைகளும் அப்படிப்பட்டவர்களே. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவளித்து, ஒழுக்கங்களைக் கற்பித்து நல்லறிவு பெறச் செய்யவேண்டும். இவற்றையெல்லாம் அக்கறையுடன் செய்யாவிட்டால் சிறுவர்கள் மனிதர்களாகலாம். ஆனால், நல்ல குடிமக்களாகவும் சான்றோர்களாகவும் திகழ முடியாது. கற்றல் என்பது வெறும் எழுத்தறிவை மட்டுமல்ல, நற்பண்பை அறிதலையும் குறிக்கிறது. இவ்விரெண்டையும் பெற்றால்தான் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும்.
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்.  வருங்கால சமுதாயத்தை உருவாக்கித் தாங்கி நிற்கும் தூண் போன்ற அவர்கள்  நற்பண்புடையவர்களாகத் திகழ  வழிவகுப்பது சிறுவர் இலக்கியமே. பெரிய இலக்கியங்களைப் பிற்காலத்தில் படித்து பயனடைய வேண்டுமானால், அவர்கள் சிறுவர் இலக்கியத்தைப் படிக்க பழக வேண்டும். சிறுவர் இலக்கியத்தைப் புறக்கணித்தால், வருங்காலத்தில் பிற இலக்கியங்கள் புறக்கணிக்கப்படும்.
உலகில் குழந்தை இலக்கியங்கள் எங்கெல்லாம் செழுமையுடன் உள்ளதோ அங்கெல்லாம் சிறந்த சமூக உருவாக்கம் நிகழ்கின்றது என்பது கண்கூடு.

சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. பாடதிட்டத்தினை தாண்டி ஏராளமான விடயங்களைக்  கற்றுக்கொள்ள இது உதவுகிறது.
அன்று குருகுலம் இருந்தது.  பெரிய குடும்பத்தில்  வயது வித்தியாசம் உள்ள அண்ணா, அக்காக்கள் இருந்தார்கள். .இன்றைய நடுத்தர குட்டி குடும்பத்தில் வளரும் சிறுவர்களுக்குத் தோன்றும் கேள்விகள் - வாழ்க்கைப் பாடங்கள், தற்கொலை, பொறாமை, கொடுமைகள், அன்றாட காமன்சென்ஸ், உள் இறுக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றை சமாளிப்பது எப்படி என்று எல்லாம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள இன்று யாரும் இல்லை. அவர்களின் மனதுக்குள்ளே அவை புதைந்து போகிறது. பள்ளிச்சிறுவர்களை அவர்களின் அடுத்த வயதுக்கு தயார் செய்யும் பொறுப்பை இலக்கியத்தின் வாயிலாக சொல்லி கொடுக்க வேண்டும்.

வளர்ந்து வரும் ஊடகத்தின் தாக்கம் ஏராளம். குழந்தைகள் உலகத்தை இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் மிகுதியாக அபகரித்துக்  கொண்டிருக்கிறது. அர்த்தமற்ற வீடியோ விளையாட்டுகளை வெறித்துப் பார்த்தபடி குழந்தைகள் முட்டாள் பெட்டிமுன் அமர்ந்திருக்கிறார்கள். இன்று தொழிநுட்ப ரீதியில் உலகம் முன்னேறிவிட்ட நிலையில் ‘கார்ட்டூன்’ மூலமான சித்திரங்களும், நாடகங்களும் குழந்தைகளின் மனதைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றன. கார்ட்டூன்கள் சிறார்களின் கற்பனை வளத்தை பெருக்குவதாக இருந்தாலும், வேகமாக மாறும் காட்சிகளாலும் நிறங்களாலும், கண்கள் சீர்குலைந்து போகின்றது.
இதனை தாண்டி புத்தகங்களோடு பழக்கம் கொள்ள நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமே அதனை நிச்சயம் குழந்தைகளும் செய்வார்கள். சீரியல் பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்துபவர்களா நீங்கள், உடனே அதைக் குறைத்துக் கொண்டு புத்தகம் ஒன்றினை எடுத்து  படித்து பாருங்கள், குழந்தையும் படிக்க துவங்கிவிடும்.

 பேச்சுவார்த்தையே தேவையில்லை என்று வன்முறைக்கும்பல்கள் அதிகரித்துப் போனதற்கு பழைய அற்புத நேயமிக்க கதைச்சொல்லிகள் இல்லாமற் போனதே காரணம். பாட்டி சொல்வது அவள் கேட்ட கதையா  அல்லது அவளுடைய சொந்த சரக்கா என்று தெரியாது. அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வாக்காகத் தோன்றும். கதை சொல்லும் பாட்டிமார்களை நாம் இழந்துவிட்டது ஒரு பண்பாட்டு இழப்பு.

எழுதப்படாத வாய்மொழி மரபில் பிள்ளைகளுக்காக நம் முன்னோர்கள் உருவாக்கியது ஏராளம்.   தாலாட்டில் தொடங்கி குழந்தைகளுக்கு ஊட்டப்படும் கதைகளும் பாட்டுகளும் உலகின் வேறெந்த நாட்டை விடவும் நம்  பண்பாட்டில் அதிகம்.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும்  நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் 'ஆத்திசூடி”, 'கொன்றைவேந்தன்” ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இவற்றில் 'ஆத்திசூடி” மிகச்சிறிய வாக்கியங்களாலும் 'கொன்றைவேந்தன்” சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. 'இன்னதைச்செய்” அல்லது 'இன்னதைச் செய்யாதே”, 'இப்படிச்செய்தால் நல்லது”, 'இப்படியெல்லாம் செய்தால் தீமை” என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தில்; குற்றச்செயல்களின் விகிதம் இன்றைய நிலையைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை.

பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் தெனாலிராமன் கதை, பரமார்த்த குருகதை, விக்கிரமாதித்தன் கதை, சிபி சக்கரவர்த்தி கதை என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை.
குழந்தைகளுக்கான நாவல்கள், குழந்தை நாடகங்கள், குழந்தைக் கவிதைகள்,புதிர்கள், படக்கதைகள்  சுற்றுலா கட்டுரைகள், மகான்களின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை,விஞ்ஞான சம்பந்தமான தொகுப்புகள் இவையாவும் சிறுவர் இலக்கியத்தில் அடங்கும்.

குழந்தை இலக்கியத்தின் பண்புகள்

குழந்தைகளுக்கான தரமான இலக்கியங்களில் குழந்தைகளின் களங்கமில்லாத மனம் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தை உள்ளத்துக்குத் திருப்தி தரக்கூடிய பாடல்கள் தான் இலகுவில் குழந்தைகளைக் கவர்ந்திழுக்கின்றன.வியப்பான, எளிய உணர்ச்சிகளை இனிய முறையில் எதுகை மோனை நிரம்பிய செய்யுள்களில் பாடினாலே குழந்தை பாடல்கள் சிறக்கும்.

சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும்.
 சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்கள் அவர்களை கவரும் வகையில் அழகான பெரிய எழுத்துக்களுடனும், பொருத்தமான படங்களுடனும் எழுத்து பிழைகளின்றியும் அமைதல் சிறப்பானது.

இந்த இலக்கியம் எழுதுவது அவ்வளவு எளிதன்று. பொறுமை, பொறுப்பு, புலமை என்பன இவ்விலக்கியம் படைக்கத் தேவை.

 குழந்தை எழுத்தாளருக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. சிறப்பான குழந்தை இலக்கியகாரர்கள் பலர் தமது துறைகளைத் துறந்து மனம் சலித்து வெளியேறிய சம்பவங்களும் உண்டு.

குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றால் அதனை ஆணிவேராக இருந்து வளர்த்தெடுத்தவர் திரு. அழ.வள்ளியப்பா அவர்கள். 
குழந்தைகளைக் கண்டால் தாமும் ஒரு குழந்தையாக மாறிவிடும் அளவிற்குக் குழந்தை உள்ளம் படைத்தவர் இவர்.

பூவண்ணன், தூரன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோரும் சிறந்த குழந்தை எழுத்தாளர்கள் ஆவர்.
அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், அரும்பு போன்ற சிறுவர் இதழகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவற்றில் சில இணையதளங்களிலும் வருகின்றன என்பது வரவேற்கதக்கது.

     காக்கையையும் குருவியையும் பசுவையையும் நாயையும் தன்னோடு இணைத்துக்கொண்ட பாரதியின் தேசத்தில், மற்றவர்களின் துன்பத்தில் ஏமாற்றத்தில் சந்தோஷம் கொள்வது போன்ற பொருள் உடைய ஆங்கில நர்சரி ரைம் தேவைதானா?

நமது சிறுவர் இலக்கியங்களில் வாழும் கலையை போதிக்கும் எவ்வளவோ வார்த்தைகள்.
    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
    ஆலயம் தொழுவது சாலவும் நன்று
    தாயிற் சிறந்த கோயிலுமில்லை
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
    ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
    மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
    அறம் செய விரும்பு ஆறுவது சினம்
    கூடிவிளையாடு பாப்பா
    வானரங்கள் கனி கொடுத்து மந்தியுடன் கொஞ்சும்”

 நமது சிறுவர் இலக்கியங்களைக் கற்றுக்கொடுக்கும் போது உற்சாகம் வரவழைப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கை நெறி இங்குதானே இருக்கிறது?
திருக்குறளையும், ஆத்திச்சூடியையும், உலகநீதியையும் கொன்றைவேந்தனையும் பாரதியின் பாப்பா பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தொடக்க வகுப்புகளில் கற்பிக்கலாமே? வளரும் தலைமுறையினரை வாழும் நெறிக்கு அழைப்போமா!

நூலகமும், புத்தகப்பண்பாடும் என்ற தலைப்பில் குழந்தை எழுத்தாளர்கள், ஓவியர்கள் அமைப்பு 5, பிப்ரவரி 2010 நடத்திய சர்வதேச கருத்தரங்களில், 'புத்தக வாசிப்பு மூலம் மனிதர்களின் மதிப்பை குழந்தைகள் அறிந்துகொள்ள முடியும், மேலும் நமது பண்பாடு, சமயம், பொருளாதாரம், நமக்கான அறிவியல் ஆகியவை குறித்து சமூக அமைப்புகள் குறித்தும் அறிந்துகொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்.”என்றார் அப்துல் கலாம். 
 புத்தகங்களை சுமையாக நினைக்கும் நிலையினை மாற்றி புத்தகங்களை சுவையாக நினைக்கும் சூழ்நிலையை நம் பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்.

லூசியா லெபோ