பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 16 octobre 2010

இன்றைய அறிமுகம் - வடலுார் அருட்பிரகாச வள்ளலார்

அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணையான இவா், 1823 ஆம் ஆண்டு அக்டோபா்த் திங்கள் ஐந்தாம் நாள், தென்னார்க்காடு மாவட்டம், கடலுாருக்கு அருகே “மருதுார்” என்னும் சிற்றுாரில், திரு இராமையா-திருமதி சின்னம்மா இணையருக்கு ஐந்தாவது கடைசி மகவாகப் பிறந்து, இராமலிங்கம் எனப் பெயரிடப்பட்டார்.

பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. அண்ணன் சபாபதி, புராணச் சொற்பொழிவுகள் செய்து, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். சிறுவயதில், இராமலிங்க அடிகளார் கல்வியில் நாட்டமின்றிக் கந்த கோட்ட முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதோடு, பாடல்களும் இயற்றிப் பாடினார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் சுற்றி வந்த தம்பிக்குச் சாப்பாடு போடக் கூடாதெனத் தன் மனைவிக்குச் சபாபதி உத்தரவிட்டார். இதன் பின்னர், வீட்டிலேயே தங்கிப் படிக்கச் சம்மதித்த அடிகளார், சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் முருக வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஒரு நாள், முகம் பார்க்கும் கண்ணாடியில் முருகன் காட்சி கொடுத்தததைக் கண்டு பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

ஒரு முறை அண்ணன் சபாபதிக்கு உடல்நலக்குறைவு காரணமாகச் சொற்பொழிவு ஆற்ற இயலாமையால், தம்பி இராமலிங்கரிடம் தனக்குப் பதிலாகச் சென்று, ஏதாவது பாடல்களைப் பாடிவிட்டுத் தன்னால் வர இயலாத நிலையையும் விளக்கிவிட்டு வருமாறு கூறினார். அதன்படியே இராமலிங்கர் சென்று மனமுருகச் சில பாடல்களைப் பாடினார். அங்கிருந்தோர் அவரிடம் ஆன்மீகச் சொற்பொழிவாற்றுமாறு வேண்ட, மிகுந்த தயக்கத்துடன் தனது பேச்சைத் தொடங்கினார். ஆனால், அது இரவு நெடுநேரம் வரை நீடித்து, மக்களின் மனத்தை ஆனந்தப் பரவசப்படுத்தியது. ஒன்பது வயது சிறுவனாக அவர் ஆற்றிய இந்த முதல் ஆன்மீகச் சொற்பொழிவே மிகவும் அற்புதமாக அமைந்தது.

பலரின் வற்புறுத்தலுக்காகத் தனது சகோதரியின் மகள் “தனக்கோட்டி”யை மணந்த அடிகளார், இல்லறத்தில் நாட்டமின்றி அமைதியையும், கடவுளையும் நாடி, உள்ளத்தில் தேடலோடு சென்னையிலிருந்து புறப்பட்டுச் சிதம்பரத்தை அடைந்தார். அங்கே “கருங்குழி” என்னும் சிற்றுாரில் தங்கிய போதுதான், எண்ணெய் என நினைத்துத் தண்ணீரை ஊற்றி விளக்கெரியச் செய்த அதிசயம் நடந்தது.

1865 இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி, மக்களுக்கு நல்ல கொள்கைகளை வழி வகுத்துக் காட்டினார். 1867 ஆம் ஆண்டு வடலுாரில் “சமரச சுத்த சன்மார்க்க தருமசாலை” என்னும் அமைப்பை நிறுவி, மக்கள் அளித்த பொருளுதவியால், எவ்விதப் பாகுபாடுமின்றிப் பசித்து வருபவர்களுக்கு மூன்று வேளை உணவளிக்க ஏற்பாடு செய்தார்.

தனது சக்தியினால், மக்களுக்கு நன்மை தரும் பல அற்புதங்களையும் செய்து காட்டிய இராமலிங்க அடிகளை மக்கள் “வள்ளலார்” என அழைக்கலாயினர். வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவ, அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் பெருகியது. தனிமையை நாடிய வள்ளலார் “மேட்டுக்குப்பம்” என்னும் ஊரில், “சித்தி வளாகத் திரு மாளிகை” என்னும் இடத்தில் தங்கினார். இதன் முன்பு இவர் ஆற்றிய உரையே “பேருபதேசம்” எனப்படுகின்றது.

ஒளி வடிவாக இறைவனைக் கண்ட வள்ளலார், சத்திய தருமசாலைக் கருகிலேயே, “சமரச சுத்த சன்மார்க்க சபை”யை அமைத்தார். 1827 சனவரித் திங்கள் 25 ஆம் நாள் தைப்பூசத்தன்று, “முதல் ஒளி வழிபாட்டு விழா” தொடங்கியது. சத்திய தருமசாலையில் “அன்னதானமும்”. சத்திய ஞான சபையில் “தைப்பூச விழா”வும் வள்ளலார் நினைத்தது போல், அவரருளால் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தனது அறையில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கைச் சித்த வளாகத் திருமாளிகை முன்பு வைத்து “அனைவரும் இனி ஒளி வடிவாக இறைவனை வழிபடவேண்டும்” என உபதேசம் செய்தார்.

1874 ஆம் ஆண்டு தைத்திங்கள் 19 ஆம் நாள், அனைவருக்கும் அருளாசி வழங்கிய வள்ளலார், இரவு 12 மணிக்குச் சத்த வளாகத் திருமாளிகை அறைக்குள் சென்று, தனது சீடர்களை வெளிப்புறமாகப் பூட்டிவிடச் சொன்னார். பின்னர் அறையைத் திறந்து பார்க்கையில் அறை வெறுமையாக இருந்தது. அன்று முதல் வள்ளலார் நம் கண்களுக்குத் தோன்றாமல் அருட்பெருஞ்சோதியாகி, அருவமாக அருளாசி வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

வள்ளலாரின் கொள்கைகள்
  • கடவுள் ஒருவரே! எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நேசித்தல் வேண்டும்.  மூட நம்பிக்கைகளை வளர்க்கும் சாதிச் சமயச் சடங்குகள் யாவும் பொய்யே. துன்பப்படும் உயிர்களுக்கு உதவுவதே இறை வழிபாடு. பசித்தவர்களின் பசியைப் போக்கும் ஜீவகாருண்யப் பண்பே இறைவனை அடையும் வழி.
  • ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. சுய நலத்திற்காக அல்லாமல் பொது நலத்திற்காகவே இறைவனை வேண்டுதல் வேண்டும்.
  • பசித்திரு! தனித்திரு! விழித்திரு! ... என்பது போன்று மனிதச் சமுதாயத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்தும் கொள்கைகளையே அவர் வலியுறுத்தினார்.
  • சிறந்த பகுத்தறிவாளரும், ஆன்ம நேயம் உடையவரும், சமுதாயச் சீர்திருத்தவாதியுமான வள்ளலார் 19 ஆம் நுாற்றாண்டின் மிகப் பெரிய தமிழ்ப் பற்றாளர், தமிழ்ப் புலமை பெற்றவா்.
வள்ளலார் இயற்றிய நுால்கள்
  • திருவருட்பா (1 முதல் 6 திருமுறைகள்)
  • பேருபதேசம்
  • அகவல்
  • வடிவுடைமாலை
  • தனிப் பாடல்கள்.
வள்ளலாரின் எழுத்துக்கள் யாவும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்த்துவதோடு, புரட்சிகரமான சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளை இனிய தமிழில், எளிய நடையில் அமையப் பெற்றதாகவும் உள்ளது.

-- சரோசா தேவராசு