பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 11 septembre 2010

பெண்களே பெண்களுக்கு -- 2

தற்போது தலைமுறை இடைவெளியால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நிறைய மாற்றங்கள் வந்த பின்பும் இரு தலைமுறையினரின் பழக்க வழக்கங்களில் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை!  மேலும் மாற்றங்கள் நல்லவையாக இருந்தால் வரவேற்கலாம்.திருமணம்வரை பிரச்னைகள் பெரிதாக வர வாய்ப்பில்லை. திருமணமாகிய பின்பு இன்னொரு குடும்பத்திற்கு வாழ வந்தவள் அங்குள்ளவர்களை பழகி புரிந்து கொள்ள முயல வேண்டும். ஆரம்பத்தில் அவ்வாறு செயல்படாது, பின் தங்களோடு இணைந்து வாழ முற்படாத அவளை அவர்கள் ஒதுக்கி வைக்க முனையும்போது பிளவுதான் வளர்கிறது. அந்த தொல்லைகளை மனதில் வைத்துக் கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தி பழி தீர்த்துக் கொள்வதால் குடும்பம் இன்னும் பிரிந்துதான் போகும்.

மாமனார் மாமியார் தன் கணவனைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, இவ்வுலகில் வாழ ஒரு தகுதியுள்ள மனிதனாக்கி, தன்னையும் அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினார்கள் என்பதை மறந்து-வயதான காலத்தில் அவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலையில் அவர்களைத் தொல்லையாகக் கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு யோசனை தருபவர்களும் பெண்களே!  தொலைபேசி மூலம் மற்ற பெண்களைப் பற்றி வம்பு பேசி அவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவதும் அவா்களே! தனக்கு வேண்டாதவர்களைச் சந்திக்கும்போது, குதர்க்கமாகப் பேசி அவர்கள் மனதைப் புண்படுத்தி அதைப் பார்த்து ரசிப்பவர்களும் பெண்கள்தான்.

இவைகளையெல்லாம் குடும்பங்களில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளாக நினைக்கிறோமே தவிர, இதனால் சம்பந்தப்பட்ட பெண்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. எத்தனையோ பெண்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே சுதந்திரமின்றி நடைப்பிணமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்கள். ஆனால், பெண்களே பெண்களுக்கு எதிரியாகி, தங்களினத்தை அழிப்பதும், அடிமைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் முறையற்ற செய்கள் என்பதை ஏனோ உணர்வதில்லை. பெண்களே பெண்களை புரிந்துகொள்ளாததை நினைத்தால் வேடிக்கையாக மட்டுமல்ல, வேதனையாகவும் உள்ளது. மற்றவர்களால் தாங்கள் பாதிக்கப்படும்போது, நெஞ்சம் கசிந்துருகி கண்ணீர் விடும் பெண்கள், மற்றவர்களை அதே நிலைக்கு ஆளாக்க எப்படித் துணிகிறார்கள் என்பது புதிராகத்தான் இருக்கிறது.

இதில் ஆண்களுக்கு சம்பந்தமே இல்லையா? நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் ஆண்கள் வீட்டு விஷயங்களில் கலந்து கொள்வதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் அநேகமாக பெண்களின் போக்குப்படியே எதையும் செய்வார்கள். ஆனால் ஏதேனும் தவறாகிப் போனால் உடனே பழியைப் பெண்கள் மீது சுமத்திவிடுவார்கள் அல்லது ஒதுங்கிக் கொள்வார்கள். அவர்கள் துணிந்து நல்லது கெட்டதுகளை அலசி ஆராய்ந்து, தவறு செய்தவர்களுக்கு அதைப் புரிய வைத்து, வீட்டில் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் நிலவச் செய்தால் எவ்வளவோ பிரச்னைகள் காணாமல் போகும். வீட்டில் உள்ள இருவருக்கிடையில் பிரச்னை வரும்போது மூன்றாமவர்தானே நியாயத்தைப் புரிந்துகொள்ளவும் அதை நிலைநாட்டவும் முடியும்?

இதுவரை பார்த்த அளவில், பெண்கள் அனைவருமே மோசமானவர்கள்தானா, இரக்க குணமே அவர்களிடம் கிடையாதா என்று தோன்றலாம். இயற்கையில் நல்லவர்களான அவர்கள் தங்களையறியாமல் செய்யும் தவறுகளே இவை. ரோசா மலரைப்போல மென்மையாக மணம் வீசும் அவர்கள் சில சமயங்களில் முள்ளாகத் தைத்துக் காயப்படுத்தி விடுகிறார்கள். இறைவனால் தாய்மை என்ற வரத்தைப் பெற்றவர்கள் நல்ல குணங்களும், பண்புகளும் உடையவர்களே! தங்களிடமுள்ள அரிய பண்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் இனத்திற்குத் தாங்களே எதிரியாகும் நிலையினை மாற்றி பெண்குலத்தின் பெருமையையும், அதே வேளையில் உரிமையையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்த வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியைப் பார்க்கும்போது “இவளும் நம்மைப்போல ஒரு பெண்” என்று நினைத்தால் போதும். எந்தப் பிரச்னைக்கும் இடமில்லை!

வெளியில் சென்று “பெண்களுக்கு சமஉரிமை வேண்டும். சுயமரியாதை, கௌரவம் வேண்டும்” என்று போராடுவதற்குமுன், நாம் விரும்பும் சுதந்திரத்தையும், உரிமைகளையும் நம் வீட்டிலுள்ள பெண்களுக்கு வழங்கி    அவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்வோம். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பெண்குலத்தின் பெருமையைத் தாங்களும் உணர்ந்து மற்றவர்களையும் உணரச் செய்தால் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும், வளமும் நிச்சயம் சிடைக்கும்.

பெண்களைப்பற்றி இத்தனை உரிமையுடனும், வேதனையுடனும், ஆதங்கத்துடனும் ஏன் எழுதினேன் என்றால்-அவர்களைப் போல

“நானும் ஒரு பெண்”

-விமலா துருவோ